இது வழக்கமான அரசியல் கட்சி சார்ந்த பதிவல்ல
மாற்றம் ஒன்றே மாறாதது என்பது உலகப் பொது விதி.
மனித மனம் எந்த ஒன்றையும் தொடர்ந்து உபயோகித்தால், தொடர்ந்து பார்த்தால் சலித்துப் போய் விடுகிறது.
அதிலும் குறிப்பாக இன்றைய இளைய தலைமுறையினரிடம் இது அதிகம் தென்படுகிறது
உதாரணத்திற்கு ஒரு மொபைல் போனை தொடர்ந்து ஒரு வருடத்திற்கு மேல் வைத்துக் கொள்வதில்லை.
ஒரே மாதியான வாகனம், வாழ்க்கை எல்லாவற்றிலும் ஒரு மாற்றத்தை விரும்புகிறார்கள்.
அதில்தான் அவர்களுக்கு ஒரு ரிலாக்ஸ் இருப்பதாக கருதுகிறார்கள்.
ஒரு வீடியோவைக் கூட சில நொடிகள், சில நிமிடங்கள் மட்டுமே இவர்களால் பார்க்க முடிகிறது.
தொடர்ந்து ஒரு வீடியோ உரையை ஒரு அரை மணி நேரம் அவர்களால் பார்க்கும் அளவுக்கு அவர்களிடம் பொறுமை இருப்பதில்லை.
அதனால்தான் எல்லாவற்றிலும் ஒரு மாற்றத்தை விரும்புகிறார்கள், அரசியல் உட்பட.
தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட 60 வருடங்களாக தொடர்ந்து இரண்டு கட்சிகளே ஆட்சியில் இருந்து கொண்டிருக்கின்றன.
அதனால்தான் மாற்றத்தை விரும்புகிறார்கள்.
ஆனால் 60 வருட ஆட்சியில் சலிப்படைந்து மாற்றத்தை விரும்பும் இவர்களின் பெரும்பாலானோரின் வயது 15 லிருந்து 35 வயதுதான்.
பலருக்கு ஓட்டுப் போடும் வயது வரவில்லை.
சிலர் இப்பொழுதுதான் முதன்முறையாக வாக்களிக்கிறார்கள். மீதியிருக்கும் 23 முதல் 35 வயதுள்ளவர்கள் திமுக, அதிமுக ஆட்சியை அனுபவித்தது கடந்த 10 ஆண்டுகள் மட்டுமே. (2016-2026).
இதில் தலா 5 ஆண்டுகள் இரு கட்சிகளும் ஆட்சி செய்திருக்கின்றன. இதில்தான் சலித்து போய் மாற்றத்தை வேண்டுகிறார்கள்.
இப்படி ஆட்சி மாற்றம் வேண்டும் என்று நினைப்பவர்களில் இரண்டு வகையினர் இருப்பார்கள்.
முதல் வகையினர் கடந்த ஆட்சியின் அவலங்களைச் சொல்லி இதனால்தான் இந்த ஆட்சி வேண்டாமென்கிறோம் என்பார்கள்.
ஆனால் இரண்டாம் வகையினருக்கு இதல்லாம் தெரியாது. அவர்கள் சொல்லும் ஒரே பதில் ‘ மாற்றம் வேண்டும் ’.
இப்போது மாற்றம் வேண்டும் என்று எதிர்பார்க்கும் இரண்டு நபர்களைப் பற்றிப் பார்ப்போம்.
முதல் நபர் ஒரு கூலித் தொழிலாளி, அன்றாடங்காய்ச்சி.
தம் வாழ்க்கையில் எதாவது அதிசயம் நிகழ்ந்து இந்த வாழ்க்கை மாறிவிடாதா என்று எதிர்பார்த்துக் கொண்டிருப்பவர்.
இன்னொருவர், ஐந்திலக்க சம்பளத்தோடு கூடிய ஒரு பணியில் இருந்து கொண்டு குழந்தை, குடும்பம் என்று ஓரளவிற்கு சுகபோகமாக திட்டமிட்டு நகரத்தில் வாழ்பவர்.
"லைஃப் ஒரே மாதிரி இருக்கு ஒரு சேஞ்ச் வேணும்" என்று நினைப்பவர்.
இருவருமே வாழ்க்கையில் மாற்றத்தை எதிர்நோக்கிக் கொண்டிருப்பவர்கள்தான்.
முதலாம்நபர் வாழ்க்கைத் தரம் உயர்ந்துவிட வேண்டும் என்பதற்காக மாற்றத்தை எதிர்நோக்குகிறார்.
இரண்டாம் நபருக்கு கேளிக்கைக்காக மாற்றம் தேவைப்படுகிறது அதற்காக அவர் ரிஸ்க் எடுத்து வேறொரு கம்பெனிக்கு மாற முடியும்.
இவர்கள் போன்றோரால்தான் இந்த ‘மாற்றம் வேண்டும்’ என்ற கோஷத்துடன் சீமான், கமல்ஹாசன் வந்தனர்.
இந்த இரண்டாம் வகையினர் self sustained ஆக இருந்து கொண்டு ஆட்சியில் ஒரு பரீட்சார்த்த முயற்சியை செய்து பார்க்க விரும்பினர்.
‘ குடுத்துத் தான் பாப்போமே ஏன் புதுசா யாரும் வரக்கூடாதா?’ வரலாம்தான்'.
அண்ணாவே அன்றைக்கு புதுசுதான். அண்ணாவுக்குப் பிறகு வந்த கலைஞரும் புதுசுதான். ஜெயலலிதாவுக்குப் பின் வந்த பழனிச்சாமியும் புதுசுதான்.
இப்போது இருக்கும் போன் பழையதாகி விட்டது என்று மாற்ற நினைத்தால்கூட இதை விட பெட்டராக வேண்டும் என்று நினைப்பவர்கள் கூட அரசியலில் அதை நினைப்பதில்லை.
காரணம்?
நான் நல்லாருக்கேன் எவன் எக்கேடோ கெட்டா எனக்கென்ன. ?
பத்துப்பேர் மாற்றம் வேண்டும் என்று தினமும் சொல்லும் போது நமக்கும் அது தோன்றத்தான் செய்யும். அதுதானே ஊடகத்தின் வேலையாக இருக்கிறது
இப்போது வாழ்க்கைக்கு அறம் என்பது எப்படி அடிப்படையோ ஒரு அரசியல் கட்சிக்கு கொள்கை அப்படி .
ஒரு நகை வாங்கும் போது கூட ‘ நாலு கடைக்கு போங்க. நாலு பக்கமும் எஸ்டிமேசன் ஸ்லிப் வாங்கி கம்பேர் பண்ணி அதுக்கப்புறம் தேர்ந்தெடுங்க ’ என்று விளம்பப் படுத்துகிறார்கள்.
நான் சொல்வதும் அதேதான்.
மாற்றம் வேண்டாம் என்று நானும் சொல்லவில்லை.
மாற்றாக ஒன்றைத் தேடும் போது அந்த மாற்றம் கொண்டு வரப்போகும் நன்மை தீமைகளையும் ஆராயுங்கள் என்றுதான் சொல்கிறேன்.
அனைத்துக் கட்சிகளின் கொள்கைகளைப் படியுங்கள்.
அவர்களின் பின்னணியை, அவர்களின் கடந்த கால செயல்பாடுகளை பாருங்கள்.
அதன்பிறகு முடிவு செய்யுங்கள்
*மாற்றம் வேண்டுமா ? வேண்டாமா ?* என்று.
நாள்: 20.04.2026

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக