வெள்ளி, 1 மே, 2026

ஜும்மா பயான்களில் அரசியல் கருத்துக்கள்


ஜும்மா பயான்களில் அரசியல் கருத்துக்கள்
தேர்தல் முடிந்த மறுநாள் (24.04.2026) வெள்ளிக்கிழமை தமிழ்நாட்டின் பெரும்பாலான பள்ளிவாசல்களில் இமாம்களால் நிகழ்த்தப்பட்ட ஜும்மா பிரசங்கங்கள், ஓரளவிற்கு ஒத்த கருத்துடையதாகவே இருப்பதை ஒவ்வொரு ஊர் பள்ளிவாசல்களிலும் இருந்து வரும் தகவல்கள் சொல்கின்றன.
பெரும்பாலும் பள்ளிவாசல் பிரசங்கங்களில் அரசியல் பேசப்படுவதில்லை. இந்த முறை தேர்தலுக்கு முன் முஸ்லீம்கள் யாரை ஆதரிக்க வேண்டும் என்று பூடகமாக சில ஆலிம் பெருமக்களும், பகிரங்கமாக சில ஆலிம் பெருமக்களும் பயான்களிலும், சமூக ஊடகங்கள் வாயிலாகவும் விளக்கி தங்கள் கருத்தை தெரிவித்தார்கள்.
ஜமாஅத் நிர்வாகிகளுக்கும், ஊருக்குக் கட்டுப்பட்டவர்களாகவும், அச்சப்பட்டவர்களாகவும்,  இருந்த பல ஆலிம் பெருமக்கள், தேர்தலுக்கு மறுநாள் தங்களுக்குள் அடக்கி வைக்கப்பட்டிருந்த ஆதங்கங்களை தங்களது ஜும்மா உரையில் பொங்கித் தள்ளி விட்டார்கள்.
தனி மனிதனாக தேர்தல் களத்துக்கு புதியதாக வந்திருக்கும் நடிகர் விஜய்யின் அரசியல் பிரச்சாரத்தையும், அவர் பின்னே கண்மூடித் தனமாக செல்லும் இஸ்லாமிய குழந்தைகள், இளைஞர்கள், இளைஞிகள் மற்றும் நடுத்தர வயதுடையோர் பற்றியுமே பேசியிருக்கிறார்கள்
அந்த நடிகர் யார் ? என்ன செய்திருக்கிறார் ? அவர் பின்னணி என்ன ? அவர் தனிப்பட்ட வாழ்க்கையின் நிலை என்ன ? அவர் அரசியல் செயல்பாடுகள் எப்படி இருக்கின்றன ? இவரால் நம் ஈமானுக்கும், நம் சமுதாயத்துக்கும் என்னவெல்லாம்  பங்கம் நேரும் என்று எந்தவொன்றையும் தெரிந்து கொள்ளாமல், தெரிந்து கொள்ளவும் விரும்பாமல் நடிகர் என்ற ஒரே ஒரு கவர்ச்சி ஈர்ப்பில் சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அவரை தங்களைக் காப்பாற்ற வந்த ஆபத்பாந்தவனாக நம்பி செயல்படுகிறார்கள் என்பதுதான் அவர்கள் அனைவரும் பேசிய உரைகளின் சாராம்சம்.
இறை நம்பிக்கையின் மீதான ஈமானை துறந்து, ஒரு நடிகனுக்காக புர்கா அணிந்த முஸ்லீம் பெண்கள் சொல்லவே கூசும் வார்த்தைகளைப் பேசி அதை பொது வெளியில் பகிர்வதும், புர்காவோடே ஆட்டம் போடுவதும், அந்த நடிகனின் வெற்றிக்காக உம்ரா செய்ததாகவும், வெள்ளிக்கிழமை தொழுகையைக் கூட விட்டு விட்டு அவனைப் தரிசிக்கச் சென்றதாகக் கூறுவதும், இவை அனைத்தையும் காட்சி ஊடகங்களில் பெருமையோடு பகிர்வதும், அறிவீனத்தின் உச்சம்.
இந்த வழிகேட்டில் இஸ்லாமிய சமூகம் எங்கு தவறியது ? எப்படி இவை நிகழ்ந்தன ? என்பவற்றை பல ஆலிம் உலமாக்களும், அரசியல் சமூக அறிஞர்களும் வருத்தத்தோடு எடுத்து வைக்கிறார்கள்.
காரணங்கள்:
கடந்த சுமார் 30 வருடங்கள் முன்பு வரை குர்ஆன் ஓதக் கற்றுக் கொள்வதும், சுன்து சுபியான் போன்ற கிதாப்கள் மூலமும், உஸ்தாதுமார்களின் பயிற்றுவிப்புக்களின் மூலமும் தொழுகை, நோன்பு போன்றவற்றைப் பற்றிய புரிதல் மட்டும்தான் ஒவ்வொருவருக்கும் கிடைத்தது. அது அன்றைக்கு போதுமானதாகவும் இருந்தது.
அதன் பிறகே பல தமிழ் நூல்கள் வெளி வந்தன. TV வீடியோக்களின் மூலமும் பல விளக்க வழிகாட்டல்கள் கிடைத்தன.
இதற்கிடையில் இஸ்லாமிய ஜமாஅத்கள் பல அமைப்புக்களாக சிதறுண்டன. வெவ்வேறு வகை முரண்பட்ட வழிகாட்டல்களும் கிடைத்தன.
அப்போது பெரும்பாலான பெற்றோர்கள் சுன்னத் ஜமாஅத்தில் இருக்க, பிள்ளைகளோ தவ்ஹீது, JAQH போன்ற அமைப்புக்களுக்கு சென்றடைந்தனர்.
இப்போதும் அதேதான் நிகழ்ந்திருக்கிறது. பெற்றோர்கள் திமுக, அதிமுக போன்ற கட்சிக்கு ஆதரவானவர்களாக இருக்க, பிள்ளைகள் (மகன், மகள்) த.வெ.க வின் தீவிர ஆதரவாளர்களாக ஆகியிருக்கின்றனர்.
இரு சம்பங்களையும் ஒன்று என்று நான் சொல்லவில்லை. ஆனால் தலைமுறை இடைவெளியில் கருத்துக்களும் மாறும் என்பதைத்தான் சொல்கிறேன்.
பெற்றோர்களும், பிள்ளைகளும் வெவ்வேறு முரண்பட்ட ஜமாஅத்களில் இருந்தாலும், அன்றைக்கு எல்லோருமே பொது வாழ்க்கைக்கு நல்ல வழிதான் காட்டினார்கள்.
' குடிக்காதே வட்டி வாங்காதே, வரதட்சணை வாங்காதே, திருடாதே, பிறரை கெடுக்காதே ' போன்ற நல்ல கருத்துக்களை மிதமாக பெற்றோர்கள் பேசி வந்த போது இளம் தலைமுறையினர் அவற்றை தீவிரமாக பிரச்சார இயக்கமாக மாற்றியும், செயல்படுத்தியும் காட்டி வந்தனர்.
இவர்களைப் போன்றவர்கள் இருந்தும் கூட இன்றைய இஸ்லாமிய சமுதாயத்தின் இளைஞர் பட்டாளம் இப்படி ஒரு இழிநிலைக்குப் போயிருக்கிறது.

ஆண்களைப் பொறுத்தவரை அதிகமாக வெளியுலகத் தொடர்பில், பள்ளிவாசல் தொடர்பில் இருக்கின்றார்கள். குறைந்த பட்சம் ஜும் ஆ பயானிலாவது சில நல்ல சொற்கள் அவர்கள் காதுக்குள் வந்து சேர்ந்து விடும்.
ஆனால் பெண்களைப் பொறுத்தவரை குர்ஆன் ஓதி முடித்து விட்டால் போதும். மற்ற விஷயங்களான தொழுகை, நோன்பு மற்றும் இஸ்லாமிய அடிப்படையிலான நல்வாழ்க்கைக்கான சில வழிகாட்டல்கள் அவர்களின் மதரசா உஸ்தாதுமார்களிடமிருந்தும், தாய், சகோதரிகள் போன்றோரிடமிருந்தும் ஒரு காலத்தில் கிடைத்தன.
மீலாது விழா காலங்களில் ஒரு வாரம், பத்து நாள் என பயான் தொடர் சொற்பொழிவுகள் நடக்கும். அதிலிருந்தும் இஸ்லாமிய வரலாறுகள், படிப்பினைகள் போன்றவற்றை அறிந்து கொண்டார்கள். இந்தக் குறைந்தபட்ச வழிகாட்டலைக் கொண்டு பலமான ஈமானுடன் இஸ்லாம் காட்டிய நல்வழியில் அந்தப் பெண்மணிகள் வாழ்ந்து காட்டினார்கள்.
ஆனால் இன்று வீட்டிலுள்ள பெண்களுக்கு மேலே சொன்னவையெல்லாம் குறைந்து போயின. சில காணாமலே போயின.
இன்றைய தலைமுறையினருக்கு மார்க்க விஷயங்களைப் பற்றிய போதிய வழிகாட்டல்களை கொடுக்கத் தவறி விட்டோம்.
அன்றைக்கு பல குழந்தைகளைப் பெற்றிருந்ததால், பெற்றோர்களும் பிள்ளைகளுக்கு செல்லம் கொடுக்காமல், மார்க்க விஷயத்தில் மிகுந்த கண்டிப்புடன் தங்கள் மக்களை வளர்த்தார்கள்.
இன்றோ, ஒன்றோ இரண்டோ மட்டும் பிள்ளைகளைப் பெற்றுக் கொண்டு, அவர்களுக்கு எதற்குமே கண்டிப்பு காட்டாமல், மிருந்த செல்லத்துடன் வளர்த்து வருகிறார்கள்.
அதுவும் மக்தப் மதரஸாவில் குர்ஆன் ஓதி முடித்து விட்டால், அத்தோடு அதை ஓரம் கட்டி வைத்து விட்டு, உலகக் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து விடுகிறோம்.
பள்ளி பருவம் முடிந்து கல்லூரிகளுக்குள் நுழைகிற போதே சர்வ சுதந்திரம் பெற்று விட்டவர்களாகவும், எல்லாமே எங்களுக்கு தெரியும் என்கிற மனநிலையிலும் பிள்ளைகள் வளர்ந்து நிற்கின்றனர்.
அத்தோடு அவர்களுக்கும் மார்க்கத்திற்குமான தொடர்பு அறுந்து போய் விடுகிறது.
கல்லூரியில் கூடா நட்பு, ஆடல், பாடல், கொண்டாட்டங்கள், கேளிக்கைகள் போன்றவை அவர்களை வழிகேட்டிற்குள் கொண்டு போய் விடுகின்றது.
மீண்டும் யோசித்துப் பாருங்கள்.
மார்க்கம் சார்ந்த வாழ்க்கைக்கு வழிகாட்டல்கள் குறைந்து போய் விடுகின்றது. கண்டிப்பு குறைந்து செல்லம் கொடுப்பது அதிகரிக்கிறது. இதனால் மார்க்கத்துடனான தொடர்பு அறுந்து போகிறது.
இந்த நேரத்தில் வேறு தவறான கருத்துக்கள் அவர்களிடம் வந்தடைகின்றன.
இந்த பருவத்தில் இன்றைய இளைய தலைமுறைக்கு அட்வைஸும் பிடிக்காது, அட்வைஸ் பண்றவங்களையும் பிடிக்காது. அதனால் அவர்களிடம் யாரும் அறிவுரை சொல்வது பிரயோசனமில்லாமல் போயிருக்கிறது.
கடந்த ஐந்தாறு ஆண்டுகளில் சமூக வலைதளங்களில் காட்சி பகிர்வுகள் - Youtube, Whatsapp, instagram, face book, ரீல்ஸ் போன்றவற்றின் தாக்கம் வேறு  வெகுவேகமாக பரவி இருக்கிறது.
அதிலும் குறைந்த நேர படக்காட்சிகளே அதிகம் பலரையும் ஈர்க்கிறது. அவர்கள் ஒரு முழு நீள வீடியோக்களை, வீடியோ / ஆடியோ உரைகளை பார்க்கவோ, கேட்கவோ பொறுமை இல்லாதவர்கள். ஆக்சன் படங்களை மட்டுமே பார்த்து ரசிப்பவர்கள்.
ஒரு சாமான்ய ரசிகனை மகிழ வைக்கும்  சினிமாவில் திரையில் காட்சிகள் நகர வேண்டும் அல்லது நடிப்பவர் நகர்ந்து கொண்டே  இருக்க வேண்டும். இதுதான் வெகுஜன சினிமாவின் வெற்றி ஃபார்முலா. ஒரே இடத்தில் இருந்து வசனம் பேசி  உரையாடுபவர்களை திரையில் பார்க்கப் பிடிக்காது. கொஞ்சம் கவனித்துப் பாருங்கள், இந்த வெற்றிகரமான வெகுஜன சினிமாவின் ஃபார்முலா விஜய்யின் மேடைப் பேச்சுக்களில் தெரியும். அவர் பேசும் உரை சுருக்கமாகவும், சில நிமிடங்களில் முடிப்பதாகவும் இருக்கும். அதுவும் மேடையில் (அ) பேருந்தில் சில அடிகள்  நகர்ந்து கொண்டே பேசுவதாகவும் வடிவமைக்கப்பட்டு இருக்கும்.
நீளமான வீடியோக்களைக் கூட பார்க்க பொறுமையில்லாதவர்களுக்கு ஆழ்ந்து வாசிக்கும் பழக்கம் இருக்காது. இதனால் எதையும் ஆழ்ந்து சிந்திப்பது என்பது போய் அந்தந்த நேரத்து உணர்ச்சிபூர்வ உரைகளுக்கு மயங்கிப் போய் அதற்கு அடிமையாகிக் கிடக்கின்றனர்.
எல்லாவற்றிற்கும் உணர்ச்சி வசப்படுகின்றனர். நடிகனின் வெறும் வெற்றுச் சவடால் பன்ச் டயலாக்குகளுக்கு மயங்கி விசிலடித்து அதை ரசித்து மகிழ்கின்றனர்.
இப்பொழுது இப்படி ரசிப்பதையும் தாண்டி ஒவ்வொருவரும் சமூக ஊடகங்களில் தங்களையே காட்சிப் பொருளாகக் காட்டி உலா வரும் அவலம் பெருகியிருக்கிறது.
புர்கா, தொப்பி போன்ற மார்க்க அடையாளங்களுடன் திரையில் தோன்றி சொல்லவும், எழுதவும் கூசத் தக்க பேச்சுக்களையும், ஏச்சுக்களையும் பேசி, ஈமான் இஸ்லாம் என்பவற்றை மறந்து ரீல்ஸுகளாக வெளியிட்டு அதில் பெருமையும் கொள்கின்றனர்.
சாதாரண உடையில் பேசுவது, கத்துவது என்பது பத்தோடு பதினொன்றகப் போய் விடும். அது பற்றி நாம் யாரும் கேள்வி கேட்கப் போவதில்லை ஆனால், தங்கள் உடை சாதாரணமானதாக இருந்தால் அதில் லைக்ஸ்-குறைவாக வரும் என்பதற்காகவே, மத அடையாளங்களுடன் தங்களை வெளிப்படுத்திக் கொள்கின்றனர். இது அவர்களைக் காட்டுவதை விட மார்க்கத்தை கேவலப்படுத்துவதாக நாம் காண்கிறோம்.
முன்பு இந்தக் கட்டுரையில் நான் சொன்ன "இந்த நேரத்தில் வேறு தவறான கருத்துக்கள் அவர்களிடம் வந்தடைகின்றன" என்பதில்  சமூக ஊடகங்கள் மூலம் மிக எளிதாக விஜய் வந்து  அங்கே உட்கார்ந்து கொள்கிறார்.
இங்கே நாம் அனைவரும் ஒன்றை கவனத்தில் கொள்ள வேண்டும்.
விஜய் பற்றிய அவர்களது கருத்துக்கள் அனைத்தும் பிறரால் திணிக்கப்பட்டவையே.
இது எப்படி நிகழ்கிறது என்பதை இப்போது பார்ப்போம்.
Youtube, Whatsapp, instagram, face book, ரீல்ஸ், X - Page போன்ற அனைத்து ஊடகங்களும் Algoritham அடிப்படையில்தான் வேலை செய்கின்றன என்பதை நீங்கள் அறிவீர்களா ?
அதாவது நீங்கள் பார்க்கிற, படிக்கிற, பேசுகிற கருத்துக்களை இந்த சமூக ஊடகங்கள் தாமாகவே 24 x 7 நேரமும் கவனிக்கிறைன.
இதைக் கொண்டு உங்கள் டேஸ்டை, விருப்பத்தை கண்டுபிடித்துக் கொண்டு, அதன் பிறகு அதே உங்கள் விருப்பத்திற்கேற்றவாறு, நீங்கள் விரும்பியது சம்பந்தமான / ஆதரவானவற்றையே உங்கள் பார்வைக்கு கொண்டு வரும்.
உங்களுக்கு மேலும் அது பிடித்துப் போக, அவை இன்னும் அதிகமாக அதே கன்டென்ட்  சமாச்சாரங்களையே உங்கள் முன் கொண்டு வந்து கொட்டும்.
நீங்கள் தொடர்ந்து பார்க்கப் பார்க்க உங்களுக்கு ஆதரவான கருத்தையே மொத்த உலகமும் கொண்டிருக்கிறது என்ற ஒரு மாய பிம்பத்தை உங்களுக்குள் உருவாக்கி விடும்.. நீங்கள் அந்தச் கருத்தை பலமாக நம்பத் தொடங்கி விடுவீர்கள்.
தொடர்ந்து உங்கள் நம்பிக்கை வலுவாகிக் கொண்டே போகும். ஆனால இது ஒரு காட்சிப் பிழையே.
நீங்கள் திரையில் பார்க்கும் இந்த உலகம் என்பது மிகச்சிறியது ஆனால் அதைத் தாண்டி வேறு பெரிய உலகம்,இருக்கிறது என்பது அதைப் பார்ப்பவர்களுக்கு அப்போது தெரியாது.
ஒரு நாள் அந்த மாய பிம்பம் உடைந்து வேறு உலகம் அவர்கள் முன் தெரிகிற போது அது அவர்களுக்கு மிகுந்த அதிர்ச்சியையே அளிக்கும்.
ஆக கண்டிப்பு குறைத்து போய் செல்லம் மிகுதியாகி, கூடவே மார்க்கத் தொடர்பும் அறுத்து போனதால் நல்ல வழிகாட்டல் கிடைக்கப் பெறாத இந்த இளைய சமூகத்தில் அனாச்சாரங்கள் உள்ளே வந்து புகுந்து விட்டிருக்கின்றது.
மார்க்கத்தின் கொள்கை, கோட்பாடு தெரியாமல் போனதால், எந்த கொள்கையும் கோட்பாடும் இல்லாமல் வந்து நிற்பவனை முழுதாக நம்பி, வெட்கக்கேடான இத்தகைய செயல்களில் ஈடுபடுகின்றனர்.
தீர்வு :
அவர்கள் அனைவரிடமும் இஇதை ஒரே நாளில் பேசி புரிய வைக்க முடியாது.
உடனடியாக ஒவ்வொரு மஹல்லாவிலும் செயல்பட்டுக் கொண்டிருக்கும் தீனியாத் மதரஸாக்களுக்கு புத்துயிர் ஊட்ட வேண்டும். இதன் மூலம் ஒவ்வொரு இஸ்லாமிய ஆண், பெண் என யாவருக்கும், ஈமான், இஸ்லாம் ஹலால், ஹராம் போன்ற.மார்க்க விஷயங்களையும், சமூக அரசியல் பார்வையையும் கற்றுக் கொடுத்து உண்மை ஈமானுடன் வாழக் கூடியவர்களாக செய்ய வேண்டும்.
இதை போர்க்கால அடிப்படையில் எல்லா ஊர்களிலும், எல்லா ஜமாஅத்துகளும் ஒன்றிணைந்து உடனடியாக செயல்படுத்த வேண்டும். குழந்தைகளுக்கும் மார்க்கக் கல்வியோடு, சமுதாயத்தைக் காக்கும் வகையில் சமூக அரசியல் புரிதல் தரும் உலகக் கல்வியையும் போதிக்க வேண்டும்.
இதற்கு நாம் நிய்யத்து வைப்போம்
வல்ல அல்லாஹ் இதை நிறைவேற்றி தருவான்.

சனி, 25 ஏப்ரல், 2026

போலியோ ஒழிப்பில் திமுக செய்த சாதனை

போலியோ ஒழிப்பில் திமுக செய்த சாதனை




1972 ஆம் ஆண்டு, திமுக அமைச்சரவையில் க. அன்பழகன் சமூக நலத்துறை அமைச்சர். அவர் அப்போது ஒரு கருத்தரங்கிற்காக வெளிநாடு சென்றிருந்த போது, போலியோவை ஒழிக்க சொட்டு மருந்து இருப்பதாக அறிந்து, அதனை இறக்குமதி செய்தார். 

ஆனால் அதனை சுகாதாரப் பணியாளர்கள் மூலம் மாநிலம் முழுவதும் எப்படி கொடுப்பது என்று விவாதித்த போது, முதலமைச்சர் கலைஞர் அவர்கள், இது ஊசி மருந்து இல்லைதானே, மற்றவர்கள் மூலமும் ஊற்றலாமே என்று கேட்டுவிட்டு ஆசிரியர்கள், அரசுப் பணியாளர்கள் மூலமும் கொடுக்கலாம் என்றார். அப்படியும் தேவைப்பட்ட ஆள் பலம் கிடைக்கவில்லை. 

எனவே இதனை விவாதிக்க தலைமை செயலாளர், சுகாதாரத்துறை செயலாளர் என பல அரசு அதிகாரிகளுடன் கூட்டம் நடந்தது. அதில் கலைஞர், ஏன் ரோட்டரி கிளப் போன்ற என் ஜி ஓக்களை பயன்படுத்தக்கூடாது? எனக் கேட்டார். 

அதற்கு தலைமை செயலாளர், மற்ற அரசுத்துறை பணியாளர்களை பயன்படுத்தலாம், 

ஆனால் தனியாரையும் பயன்படுத்தினால் அரசாங்க இயந்திரம் சரியில்லை,இவர்களுக்கு நிர்வகிக்கத் தெரியவில்லை. என்ற அவப்பெயர் அரசுக்கு ஏற்படும் என்றார். 

ஆனால் கலைஞரோ அரசாங்கம் ஊனம் ஆகலாம் ஆனால் மக்கள் ஊனம் ஆகக்கூடாது.என சொல்லிவிட்டு ரோட்டரி சங்க ஆட்களை அழைத்துப் பேசி, போலியோ சொட்டு மருந்துகொடுக்க ஏற்பாடு செய்தார். 

தமிழகம் முழுவதும் இத்திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டது

ரோட்டரி சங்கங்கள் தங்கள் தலைமையகத்துக்கு ஆண்டு தோறும் அறிக்கை அனுப்புவார்கள். 
அதில் தமிழக ரோட்டரி சங்கங்கள், தாங்கள் போலியோ ஒழிப்பில் ஈடுபடுவதையும் சேர்த்து அனுப்ப, மற்ற மாநில, நாடுகளிலும் ரோட்டரி சங்கங்கள் இந்த சேவையை தொடரத் துவங்கின. 

நான் 1974 ஆம் ஆண்டு பிறந்தவன். என் செட்டில் இருந்தே ஒரு போலியோ நோயாளியை கண்டதில்லை. 
ஆனால் தெருக்களில், பள்ளியில் எனக்கு மூத்த நிறையப் பேர், போலியோவால் அவதிப்படுவதைக் கண்டுள்ளேன். 

 அது இல்லாமல் இங்கே ஒழிந்ததற்கு அன்பழகனும், கலைஞரும் மூல காரணம்.

அன்பழகன், நான் இரண்டாம் இடத்தில் இருக்கிறேன் என்பார்கள். எனக்கும் கூட ஆரம்பத்தில் மனச்சங்கடம் அது குறித்து உண்டு. எனக்குத் தோன்றியது ஒரு பொறிதான். 
ஆனால் அதை செயலாக்கம் செய்தவர் கலைஞர். அப்படிப்பட்ட செயலூக்கம் உள்ளவரிடம் இரண்டாம் இடத்தில் இருப்பது எனக்கு மகிழ்ச்சியே என்று குறிப்பிட்டிருக்கிறார்

பின் குறிப்பு: 
 1983 ஆம் ஆண்டு தமிழகம் போலியோ இல்லாத மாநிலமாக அறிவிக்கப்பட்டது.
 2019ஆம் ஆண்டில் தான் இந்தியா போலியோ இல்லாத நாடாக அறிவிக்கப்பட்டது


நன்றி: டீக்கடையார்

செவ்வாய், 21 ஏப்ரல், 2026

மக்களவை மறுவரையறை திருத்த சட்ட மசோதா

நான்கு நாட்களுக்கு முன்பு 16.04.2026 அன்று பாராளுமன்றத்தில் பாஜக அரசு அவசர அவசரமாக மகளிர் இட ஒதுக்கீடு மசோதா போர்வையில் பாராளுமன்ற உறுப்பினர்களின் மசோதாவையும் இணைத்துக் கொண்டு வந்து தாக்கல் செய்தது. 

அந்த மசோதா பலத்த எதிர்ப்புக்கிடையில் வாக்கெடுப்பில் தோல்வியடைந்தது. இது நாம் அனைவரும் அறிந்ததுதான்.

மசோதாவை கொண்டு வந்த போதும், 
அதற்கு பின்பும் பாஜகவும், அதன் கூட்டணி கட்சிகளும் ஒரு கணக்கை சொல்லி இதனால் *எந்த மாநிலத்துக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாது* என்று விடாமல் கூவிக் கொண்டே இருந்தார்கள்.

அவர்கள் காட்டிய கணக்கைப் பார்த்தால், ' *சரியாகத்தானே சொல்கிறார்கள், இதிலெதற்கு திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் பலத்த எதிர்ப்பைக் காட்ட வேண்டும்* ?' என்றுதான் தோன்றியது.

விபரமில்லாமல் இவ்வளவு பேர் மக்களவையில் எதிர்த்துக் குரல் கொடுக்க மாட்டார்களே, 

அதிலும் அதற்கு சரியான பதில் விளக்கத்தை ஒன்றிய பாஜக அரசின் அமைச்சர்கள் ஏன் கொடுக்க முடியாமல் மசோதாவை தோற்றுப் போக விட்டார்கள் ? என எமக்குள் ஒரு கேள்வி வந்தது.

இது சம்பந்தமாக இணையத்தில் தேடினேன்.

அப்போது prsindia என்ற வலைதளத்தில் ஒன்றிய அரசின் அதிகாரபூர்வ கணக்குகளைக் கொண்ட பட்டியலோடு எனக்கு விளக்கமும் கிடைத்தது.

 *பாஜகவினர் சொன்னது பாதி, சொல்லாமல் விட்டது மீதி* என்பதும் புரிந்தது.

அதை மற்றவர்களுக்கும் புரியும் வகையில் விளக்குகிறேன்.


இப்போது நடைமுறையில் இருக்கும்  சீட்களின் எண்ணிக்கை 
 *வடக்கு : தெற்கு ஒதுக்கீடு* என்பது *77 : 23 என்ற ratio* வில்தான் இருக்கிறது

இதுவே தொகுதி *மறுவரையறைக்குப் பிறகும் அதே 77 : 23 என்பதாகவே இருக்கும்* என்று Project செய்யப்பட்டிருக்கிறது. 

இது சரிதானே என்று தோன்றுகிறது.

 *இதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை* 

இனி அடுத்தடுத்து இதில் உள்ள சிக்கல்களைப் பார்க்கலாம்.

 *மகளிர் இட ஒதுக்கீடு திருத்த மசோதா:* 

22.09.2023-அன்று நிறைவேற்றப்பட்ட அரசியலமைப்புத் திருத்தச் சட்டம், மக்களவை மற்றும் மாநிலச் சட்டமன்றங்களில் பெண்களுக்கு மூன்றில் ஒரு பங்கு இடங்களை ஒதுக்கீடு செய்யும் முறையை அறிமுகப்படுத்தியது. 

இந்த இட ஒதுக்கீடானது, 2023-ஆம் ஆண்டைய இச்சட்டம் நடைமுறைக்கு வந்த பிறகு மேற்கொள்ளப்படும் முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் அமையும். அடுத்த மக்களவைத் தேர்தல்கள் 2029-ஆம் ஆண்டில் நடைபெறும்போதும் இந்த இட ஒதுக்கீடு பொருந்தாது என்றும் சொல்கிறது 

 அதாவது மகளிர் இட ஒதுக்கீடு மசோதா 2029 இல் செல்லாது என்று ஏற்கனவே சட்டத்தில்  இருப்பதால் அதை திருத்தம் செய்ய வேண்டும் என்று ஒன்றிய அரசு சொல்கிறது

இதைக் காரணம் காட்டியே பாஜக அரசு இதில் ஒரு amendment போட்டு திருத்தம் செய்வதற்காக அவசர அவசரமாக மக்களவையைக் கூட்டியிருக்கிறது. கூடவே இன்னும் இரு மசோதாக்களையும் நிறைவேற்ற கொண்டு வந்தது

மக்களவையில் இடங்களின் *மறுவரையறை திருத்த சட்ட மசோதா* :

மக்களவையில் உள்ள இடங்கள், மாநிலங்களின் மக்கள் தொகைக்கு விகிதாசார அடிப்படையில் ஒதுக்கப்பட வேண்டும் என்று அரசியலமைப்புச் சட்டம் சொல்கிறது.

ஒவ்வொரு மக்கள் தொகை கணக்கெடுப்பிற்குப் பிறகும் தொகுதிகள் மறுவரையறை (அல்லது எல்லை நிர்ணயம்) செய்யப்பட வேண்டும் என்றும் இச்சட்டம் வலியுறுத்துகிறது. 

 *இப்போது 1971 population-ஐ கணக்கில் எடுத்துக் கொண்டு மாநிலங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களின் எண்ணிக்கையே நடைமுறையில் இருக்கிறது.* 

உதாரணமாக 1971 மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி தமிழ்நாட்டிற்கு 39 இடங்கள் ஒதுக்கப்பட்டிருக்கிறது. 

ஒன்றிய அரசின் மறுவரையரை திருத்தச் சட்டத்தில், லேட்டஸ்ட் மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் வரும் *சீட்களின் எண்ணிக்கையோடு பிளஸ் 50% சேர்த்து ஒதுக்கப்படும்* என்று சொல்கிறது

அதாவது 39 + 50% = 58 வரும் என்று சொல்கிறது. 
இதுதான் *பாஜக சொன்ன பாதி விஷயம்.* 

இனி *சொல்லாமல் விடப்பட்ட மீதி விபரத்தை பார்ப்போம்* 

இதன் பிறகு 2011 ல் எடுக்கப்பட்ட சென்ஸஸ் கணக்கின்படி தமிழ்நாட்டில் மக்கள் தொகை 7, 21,47,030. 

அடுத்த தொகுதி மறுவரையறைக்கு 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பு பயன்படுத்தப்படும் என்றும், 
அதன் அடிப்படையில் சீட்கள் ஒதுக்கப்படும் என்றும் சட்டம் விளக்குகிறது.

இதைக் கணக்கில் எடுத்துக் கொண்டு பார்த்தால் *32 இடங்களே தமிழ்நாட்டிற்கு வரும்* என்கிறது ஒன்றிய அரசு. அதாவது 7 சீட் குறைகிறது. 

கேரளாவிற்குரிய இடங்கள் 20-லிருந்து 15-ஆகவும் குறையும். 

அதே வேளையில், உத்தரப் பிரதேசத்தின் இடங்கள் 80-லிருந்து 89-ஆகவும், 

பீகாரின் இடங்கள் 40-லிருந்து 46-ஆகவும், 

ராஜஸ்தானின் இடங்கள் 25-லிருந்து 30-ஆகவும் அதிகரிக்கும். 

இந்த *எண்ணிக்கையுடன் ஒன்றிய அரசு சொல்லும் 50% ஐ சேர்த்தால்*

 *தமிழ்நாட்டிற்கு* 32 + 16 = *48 சீட்கள்* வரும்.

 *கேரளாவிற்கு 15+7 = 22* ம், 

 *உ.பி.க்கு* 89 + 44 = *133* ம், 
 *பீகாருக்கு* 40 + 23 = *69* ம், 
 *ராஜஸ்தானுக்கு* 30 + 15 = *45 (அ) 46* ம் கிடைக்கும்.

அதாவது *சீட்களின் எண்ணிக்கை இப்படி அதிகரிக்கும்:* 

தமிழ்நாட்டிற்கு 39 லிருந்து 48 ஆகும் (+9) (23%) ,

கேரளாவுக்கு 20 லிருந்து 22 ஆகும் (+2) (10%).

உ.பி.க்கு 80 லிருந்து 133 ஆகும் (+53) (60%),

பீகாருக்கு 40 லிருந்து 69 ஆகும் (+29)(72.5%,),

ராஜஸ்தானுக்கு 25 லிருந்து 46 ஆகும் (+21)(84%)

மேலே சொல்லியுள்ள ஐந்து மாநிலங்களின் தரவுகளின் கணக்குகள் ஒரு உதாரணத்திற்குத்தான்.

அனைத்து மாநிலங்களின் தரவுகளின் முழு விளக்கத்திற்கு இத்துடன் இணைக்கப்பட்டுள்ள அட்டவணையைப் பார்க்கவும். .

 *மக்கள் தொகையை சிறப்பாக கட்டுப்படுத்திய மாநிலங்களுக்கு குறைவான இடங்களும்* , 

எந்த திட்டங்களும் இல்லாமல் *மக்கள் தொகையைப் பெருக்கிய மாநிலங்களுக்கு அதிக இடங்களும் அதிகரிக்கப்பட்டு இருப்பது* தான் பிரச்சனைக்குரியதாக இருக்கிறது.


இத்தோடு இந்த விஷயம் முடியவில்லை 

இந்த மசோதா அடுத்து இப்போது துவங்கப்பட்டிருக்கும் *மக்கள் தொகை கணக்கெடுப்பு முடிந்த பிறகு (2027 - 2029) அதன் அடிப்படையில்  அதைக் கொண்டு மீண்டும் தொகுதி மறுவரையரை செய்யப்படும்* என்கிறது சட்டம்.

அப்படியானால் சிறப்பாக மக்கள் தொகையை  கட்டுப்படுத்தி வரும் *தமிழ்நாடு போன்ற மாநிலங்களின் இடங்களின் எண்ணிக்கை இன்னும் குறையும்* அபாயம் இருக்கிறது.

 அதாவது கிடைக்கப் போகும் 48 சீட்டுகளில் இருந்து 2029 தேர்தலில் இன்னும் சீட்டுகளின் எண்ணிக்கை குறைய வாய்ப்பிருக்கிறது. 

இது நம் தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல 
நம்மைப் போன்று மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்திய எல்லா மாநிலங்களுக்கும் ஒன்றிய அரசிடமிருந்து கிடைக்கும் வெகுமதி.


வரும்போது பார்த்துக் கொள்ளலாம் என்று எண்ணாமல், 
இவற்றை எல்லாம் கவனத்தில் கொண்டுதான் ' *வரும் முன் காப்போம்* ' என்ற அடிப்படை நோக்கத்தோடு திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் பெரும் எதிர்ப்பை மக்களவையில் தெரிவித்தன. 

அந்த எதிர்ப்பைக் கொண்டே அந்த மசோதாவை தோல்வியடையவும் செய்தனர் 

இந்த மீதி பாதி விபரத்தை ஒன்றிய அரசு சொல்லாமல் மறைத்தாலும் திமுக போன்ற கட்சியினர் மேற்படி சட்ட விபரங்களை அறிந்துதான் செயலாற்றினார்கள்.

இந்த முழு விபரத்தையும் நம் சக தோழர்களுக்கும் தெரியபடுத்த வேண்டும் என்பதற்காகவே இந்த பதிவு.

prsindia வலைதளத்தின் முகவரியும், 
அதிலிருந்து எடுக்கப்பட்ட அட்டவணையும் தனியே அடுத்தடுத்த பதிவுகளில் படிக்கிறவர்கள் தேவைக்காக கொடுக்கப்பட்டுள்ளது.

நன்றி

முஸ்லீம்களின் ஒற்றுமை

அஸ்ஸலாமு அலைக்கும்

இன்னும் 3 நாட்களே தேர்தலுக்கு உள்ளது.

திமுக, அதிமுக என இரு பெரும் கட்சிகளின் கூட்டணிகளும், த.வெ.க, நா.த.க என இரு கட்சிகளும் தனித்தனியாகவும் மோத நாலு முனைப் போட்டி என்பது முடிவாகி உள்ளது.

தமிழ்நாட்டில் காலூன்ற பாஜக பல முயற்சிகளை தொடர்ந்து செய்து வருவதை நாம் அனைவரும் அறிவோம்.


ஒவ்வொரு முறையும் புதிய புதிய வியூகங்களுடன் வந்து கொண்டே இருக்கிறது. 

இந்த முறை அதிமுகவையும் இன்னும் சில கட்சிகளையும் மிரட்டி பணிய வைத்து கூட்டணியாக்கி மற்றவர்களின் தோளில் ஏறிக் கொண்டு வந்து நிற்கின்றது

50 வருட பாரம்பரிய அதிமுகவையும், பல வருட அரசியல் அனுபவம் பெற்ற எடப்பாடி மற்றும் மற்ற அதிமுக தலைவர்களையும் தன்னிடம் பணிய வைக்கத் தெரிந்த பாஜகவுக்கு, 
எந்த அரசியல் அனுபவமும் இல்லாத, எப்படி கட்சி நடத்துவது என்ற அடிப்படை அறிவும் கூட இல்லாத விஜய்யை கையும் களவுமாக கரூர் விஷயத்திலும், இன்னும் பல விஷயங்களிலும் கைது செய்து பணிய வைக்க முடியாததில்லை. 

பாஜகவின் திட்டம் வேறு. ஒரு புறம் திமுகவை எதிர்த்து அதிமுக மற்றும் மற்ற கட்சிகளுடன் இணைந்து கூட்டணி,
 மறுபுறம் அதே திமுகவை எதிர்த்து விஜய், சீமான் போன்றோரை வெளியில் வைத்து தனியாக களமாட வைத்து ஓட்டைப் பிரிப்பது.

சீமான், விஜய் இருவரும் பாஜக கூட்டணிக்குள் வந்தால் இவர்களுக்கு இப்பொழுது கிடைக்கும் ஓட்டுக்களும் குறைந்துதான் போகும் என்பது தெரிந்து, தனியாக நிற்க விட்டிருக்கிறார்கள் 

தேர்தல் முடிந்த பிறகு தேவைப்பட்டால் இவர்கள் பாஜகவுக்கு ஆதரவு தருவார்கள்.


இப்பொழுது நாம் வேறு ஒரு விஷயத்தை புரிந்து கொள்ள வேண்டும். 

 *பாஜக இரண்டு பேர்களிடமிருந்து வாக்குகளை எதிர்பார்ப்பதில்லை.* 

அதில் ஒன்று *தமிழ்நாடு மற்றும் கேரளா மாநில மக்களின் ஓட்டுக்கள்*
 
அதேபோல் இரண்டாவது *முஸ்லிம்களின் ஓட்டுக்கள்.* 

பாராளுமன்றத்துக்கு தென்னிந்தியாவிலிருந்து கிடைக்கும் சீட்டுக்கள் 23%தான். 
மீதி 77% சீட்டுக்கள் வட இந்தியாவிலிருந்து அவர்களுக்கு கிடைத்து விடுவதால் தென்னிந்தியாவின் சீட்டுக்களை எதிர்பார்ப்பதில்லை.

அதே போல் அதில இந்திய அளவில் மொத்த மக்கள் தொகையில் முஸ்லீம்களின் சதவீதம் 14.2%, தமிழ்நாட்டில் 5.86%.

மொத்த வாக்காளர்களிலும் முஸ்லீம் வாக்காளர்களின் சதவீதமும் கிட்டத்தட்ட இதையொட்டியே இருக்கிறது.

 *இந்த வாக்குகளையும் பாஜக எதிர்பார்ப்பதில்லை.* 

இன்னும் சொல்லப்போனால் *முஸ்லீம்களின் வாக்குக்கள் எங்களுக்கு வேண்டாம்* என்று சொன்ன பாஜக தலைவர்களும் இருக்கிறார்கள்.

 *பிறகு எதற்காக பாஜக இத்தனை திட்டங்களைப் போட்டு தமிழ்நாட்டில் வேலை பார்க்கிறது ?* 

 *ஒன்று கவுரவப் பிரச்னை* . 
அகில இந்தியா முழுவதுமே பாஜகவை ஏற்றுக் கொண்டிருக்கிறது, எல்லா மாநிலங்களிலும் பாஜக பங்கு பெற்ற ஆட்சிகள் நடக்கிறது, நடந்திருக்கிறது. 
ஆனால் தமிழ்நாட்டில் மட்டும் நுழைய முடியாமல் போவது அவர்களுக்கு ஒரு கௌரவ குறைச்சலாகவே தோன்றுகிறது. 

 *இரண்டு பாஜகவின் மூலக் கட்சியான ஆர்எஸ்எஸ்-சின் முக்கிய லட்சியம், அகண்ட இந்துஸ்தானத்தை அமைப்பது* . 
அதற்கு தமிழ்நாடு ஒரு இடைஞ்சலாக இருக்கிறது.

ஒரு மளிகை கடையில் 20 பொருட்கள் இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம் 
அதில் எல்லாம் பொருட்களும் எல்லா நாளும் விற்பனையாகும் என்று சொல்ல முடியாது. 
அதில் ஒரு இரண்டு பொருட்கள் எப்பொழுதாவதுதான் விற்கும். 
அதற்காக கடைக்காரர் அந்த பொருளை வாங்கி வைத்துத்தான் ஆக வேண்டும்.  
ஏனெனில் அவை இல்லாமல் போனால் மற்ற பொருட்களின் விற்பனை பாதிக்கப்படும் அதுபோல்தான் இதுவும்.

இதுபோலத்தான் தமிழ்நாட்டின் வாக்குகளை *எதற்கும் இருக்கட்டும்* என்று வைத்திருக்கிறார்கள்.

 *எதற்காக முஸ்லிம்கள் தேவைப்படுகிறார்கள் ?* 

இதைவிட இன்னொரு ஸ்பெஷல் ஐட்டம் இருக்கிறது. 
அதுதான் *மத ஒற்றுமை* 
.
முஸ்லிம்களுக்கு எதிராக சட்டங்களையும் அல்லது பிரச்சினைகளையும் வேண்டுமென்றே பாஜக கொண்டு வரும் 
அதை எதிர்த்து முஸ்லிம்கள் ஒன்று திரண்டு குரல் கொடுப்பார்கள். போராடுவார்கள். 

இப்படி முஸ்லீம்கள் திரளுவார்கள் என்பது பாஜகவுக்கும் தெரியும்.


எதற்காக முஸ்லிம்கள் ஒன்று திரண்டார்கள் என்கிற காரணத்தை மறைத்து, நியாயமான அந்தப் போராட்டத்தை தங்கள் மீடியாக்கள் மூலம் பாஜகவினர் வெளி உலகத்துக்கு " *பார்த்தீர்களா, ஒரு முஸ்லீமுக்கு ஒன்று என்றாலும் எல்லா முஸ்லீம்களும் ஒன்று சேர்ந்து கொள்கிறார்கள்* " என்று தவறாகக் காட்டுவார்கள். 

அதன் தொடர்ச்சியாக " *இந்துக்களே ஒன்றுபடுங்கள்* " என்ற கோஷத்தை முழங்குவார்கள்

 வெளிப்படையாக இதில் தவறேதும் தெரியாது.

இந்துக்களின் ஒற்றுமையை முஸ்லிம்கள் எந்த காலத்திலும் தவறாக பார்க்கப் போவதில்லை. அப்படி பார்க்க வேண்டிய அவசியமும் இல்லை.

 *இந்துக்களும் முஸ்லிம்களும் ஒற்றுமையாக சேர்ந்து வாழ வேண்டும் என்பதே பெரும்பான்மை இந்துக்கள் மற்றும் முஸ்லிம்களின் விருப்பம்.* 

' *நானும் வாழ்கிறேன் நீங்களும் வாழுங்கள்* 'என்பது முஸ்லிம்களின் கொள்கை, பெரும்பான்மை இந்துக்களின் கொள்கையும் அதுதான். 

ஆனால் ' *நாங்கள் மட்டும் இங்கு வாழ வேண்டும், நீங்கள் வாழக்கூடாது* ' என்பது ஆர் எஸ் எஸ் இன் சித்தாந்தம்.

இந்து, முஸ்லீம் இருவரும் சேர்ந்து வாழ்ந்தால், அதை வைத்து பாஜக அரசியல் செய்ய முடியாது என்பதற்காக இந்துக்களை தனியாக பிரித்து முஸ்லிம்களுக்கு விரோதமாக சிந்திக்கவும் செயல்படவும் தூண்டவே முஸ்லிம்கள் ஒற்றுமையை எதிர்பார்க்கிறார்கள்.

 *முஸ்லீம் எதிர்ப்பு* என்ற ஒன்று இல்லாவிட்டால் பாஜகவுக்கு சொல்லிக் கொள்ள பெரிதாக வேறு கொள்கை ஏதும் இல்லை.

ஒன்றை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்.

 பெரும்பான்மை சகோதர சமுதாய மக்களின் நல்லுறவோடு நாம் இங்கு பாதுகாப்பாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அதற்கு எந்த விதத்திலும் பங்கம் வந்துவிடக்கூடாது.

அதனால் நண்பர்களே இப்பொழுது சமூக வலைதளங்களில் பதிவுகளை இடுவதிலும், பேசுவதிலும், கருத்துக்களைப் பகிர்வதிலும் நாம் மிக எச்சரிக்கையாக இருப்பது நல்லது.

எல்லோருக்குமான நல்லதைக் கூட இப்பொழுது சொல்வதற்கு யோசிக்க வேண்டியிருக்கிறது.

கொஞ்சம் பொறுப்புணர்வோடு சகோதர சமுதாய மக்களுடனும் ஒன்றுபட்டு நாம் வாழ முயலுவோம்

வல்ல அல்லாஹ் நம் அனைவரின் மீதும் சாந்தியையும், சமாதானத்தையும் இறக்கியருள்வானாக.

வாட்ஸ் அப்பில் பகிர்ந்தது 20.04.2026

முஸ்லீம்களின் எதிர்ப்பு விஜய்யை நேரக்கி

அஸ்ஸலாமு அலைக்குட்

 *முஸ்லீம்களிடையே ஒற்றுமை வேண்டும்* என்னும் உயரிய நோக்கம் ஆதங்கமாக நம்மில் பலரிடமும் இருக்கிறது.. 

இப்பொழுது இந்த நோக்கத்தை நிறைவேற்றிக் கொடுத்திட்ட *வல்ல அல்லாஹ்வுக்கே எல்லா புகழும்.* 

சன்னி, ஷியா, மத்ஹபுகள், சிம், JAQH, தவ்ஹீத், தமுமுக, SDPI என்று பல்வேறு அமைப்புக்களாக இயங்கி வந்த அனைத்து முஸ்லீம் ஜமாஅத்-துகளையும் ஒன்றிணைத்த பணியை இப்போது நடிகர் விஜய் செய்துள்ளார். 

இதற்கு அவருக்கும் ஒரு பாராட்டை முஸ்லீம் சமுதாயம் பதிவு செய்ய வேண்டும்.

ஏனெனில் *தங்களுக்கு எதிராக ஒரு பொது எதிரி உருவாகி வரும் போது அந்த எதிரியை சமாளிக்கவும், தோற்கடிக்கவும் தாங்களாகவே எல்லோரும் ஓரணியில் திரள்வார்கள்* என்பது உலக நடைமுறை வரலாறு. 
அதுதான் இப்போது நிகழ்ந்து கொண்டு இருக்கிறது.

ஒட்டு மொத்த அனைத்து ஜமாத் தலைவர்களும், மார்க்க அறிஞர்களும் ஒரே குரலில் விஜய்யின் அரசியலை கண்டிக்கிறார்கள். 

இஸ்லாமிய அமைப்புக்கள் மட்டுமல்ல சிறுபான்மையினர் அமைப்புக்களும் குறிப்பாக கிறிஸ்தவ பேரவையினரும் இதே கருத்தில் பேசுகிறார்கள்.

இதற்கு முன் NRC, CRI விஷயத்தில் அனைத்து முஸ்லீம்களும் ஒன்றிணைந்தோம்.

ஆனால் இந்த முறை மற்ற சிறுபான்மையினர் அமைப்பினரும் விஜய் என்ற அந்த நடிகரை எதிர்க்கிறார்கள்.

இன்னும் சற்று கவனித்துப் பார்த்தால், *தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கட்சிகளும்* (பாஜக, அதிமுக கூட்டணி கட்சிகள் தவிர) *இதே கருத்தில் வெளிப்படையாக பேசி வருகின்றன* . மூர்க்கமாக எதிர்ப்பவர்களும் இவர்களில் உண்டு.

இவர்கள் அனைவரிலும் சில விதிவிலக்கு (Exemptions) களும் இருக்கிறார்கள்.அவர்கள் சொந்த நலனுக்காகவும், வேறு சொந்த காழ்ப்புணர்ச்சிகளினாலும் ஆதரவாக செயல்படுபவர்கள்.

இவ்வளவு பேரும்.அந்த நடிகரைப் பற்றி அறிவுபூர்வமான தங்களது கேள்விகளை எழுப்பியும், தங்களது விளக்கமான கருத்துக்களைப் எதிர்த்துப் பேசியும் அவற்றை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்கள்.

ஆனாலும் இன்றைய இளம் தலைமுறையினர் ஆண்களும், பெண்களுமாக பலர் அந்த நடிகனுக்கு வால் பிடித்துக் கொண்டும் கண் முடித்தனமாக ஆதரித்துக் கொண்டும்தான் இருக்கிறார்கள்.

 *இவர்கள் ஒவ்வொரு வீட்டிலும் இருக்கிறார்கள்.* ஓட்டுப் போடும் வயது வராதவர்களும், முதல் முறையாக வாக்களிக்கப் போகிறவர்களுமாக அவர்கள் அதிகம் இருக்கிறார்கள்.

 *இளங்கன்று பயமறியாது* என்பது போல இவரை ஆதரித்தால் என்னவெல்லாம் நடக்கும் என்று கற்பனை உலகில் இருந்து கொண்டிக்கிறார்கள். 

நிஜமாகவே என்னவெல்லாம் நடக்கும் என்பதை அறியாதவர்களாகவே இருக்கிறார்கள். 

அவர்களளில் பெரும்பாலானோர் *பள்ளிவாசல் தொடர்பில் இல்லாதவர்களாகத்தான் இருக்கிறார்கள்* . *ஈமான், இஸ்லாம் தெரியாத முஸ்லீம் பெயர்தாங்கி* களாக இருந்து கொண்டிக்கிறார்கள்.

சினிமா போதையில் வெறியூட்டப்பட்டிருக்கும் அவர்கள் கண்ணை மூடிக் கொண்டு அந்த நடிகன் சொல்வதை முழுமையாக நம்புபவர்கள். (அவன் சொல்வதே அரைகுறை)


நிலைமை இப்படியிருக்க, இவர்கள் கண்களுக்கும், காதுகளுக்கும், கல்புகளுக்கும் இந்த வீடியோ, ஆடியோ, வாட்ஸ் அப் பதிவுகள் போனாலும் *அவற்றை ஆழ்ந்து கேட்பார்களா ? பார்ப்பார்களா ? என்பது நிச்சயமில்லை.* 

அப்படியே பார்த்தாலோ, படித்தாலோ அது பற்றி *கொஞ்சமாவது ஆழ்ந்து யோசிப்பார்களா ? என்றால் அதுவும் நிச்சயமில்லை.* 

 *வேறு என்னதான் செய்வது ?* 

 *குடும்பத்தில் உள்ளவர்கள் மற்றும் விபரமான அவர்களின் நண்பர்கள்* ஆகியோர் அவர்களை நெருங்க அவர்களிடம் *அழகான முறையில் பேச வேண்டும்* . 
நம் சமுதாயத்திற்கு எதிரான கட்சி அது, அதன் பின்னணியில் பாஜக இருக்கிறது, நாளை இவர்கள் வந்தால் என்ன நடக்கும் ? என்பதை பற்றி பேசுங்கள்.

 *முறைப்பார்கள், கோபப்படுவார்கள் இவை எல்லாம் நடக்கும்.* 

ஆனாலும் கோபப்படாமல் விளக்க வேண்டியது நம் கடமை.

பாஜகவின் திட்டத்தின்படி சமூக வலைதளங்களிலும், பத்திரிக்கைகளும் போலியாக பல கருத்துக் கணிப்புக்களும், 
பொய் செய்திகளும் தொடர்ந்து பரப்பப்பட்டு கொண்டே வருகிறது.

இவை யாவும் திட்டமிட்டு பரப்பப்படும் கருத்துத் திணிப்புக்கள். 
நம்மை நம்ப வைக்க செய்யப்படும் திட்டமிட்ட விளம்பர உத்திகள். இவற்றைக் கண்டு யாரும் கவலை கொள்ளத் தேவையில்லை. 
அல்காரித அடிப்படையில் செயல்படும் AI உலகில் கட்டமைக்கப்பட்ட தந்திரங்கள் இவை என்பதையும் அவர்களிடம் சொல்லுங்கள்.

 *தீமை நடைபெறக் கண்டால் அதை உங்கள் கரங்களால் தடுங்கள், அது முடியா விட்டால் நாவினால் தடுங்கள். அதுவும் முடியா விட்டால் தீமை எனக் கருதி அதை வெறுத்து ஒதுக்குங்கள்* என்றார் கண்மணி நாயகம் (ஸல்)

" *விதைகளை கொண்டு போய் தெளியுங்கள். அது உங்கள் கடமை. அதை விளைவிப்பது எனது பொறுப்பு"* என்று தேவன் சொல்வதாக பைபிள் சொல்கிறது.

" *இறைவன் மீது நம்பிக்கை வையுங்கள். அதே சமயம் ஒட்டகத்தையும் கட்டி வையுங்கள்* " என்பதும் நபிமொழி

ஆக முயற்சி நம்முடையதாக இருக்கட்டும்
முடிவு இறைவன் வசம் இருக்கும்.

ஞாயிறு, 19 ஏப்ரல், 2026

மாற்றம் ஒன்றே மாறாதது


இது வழக்கமான அரசியல் கட்சி சார்ந்த பதிவல்ல

மாற்றம் ஒன்றே மாறாதது என்பது உலகப் பொது விதி.

மனித மனம் எந்த ஒன்றையும் தொடர்ந்து உபயோகித்தால், தொடர்ந்து பார்த்தால் சலித்துப் போய் விடுகிறது. 

அதிலும் குறிப்பாக இன்றைய இளைய தலைமுறையினரிடம் இது அதிகம் தென்படுகிறது

உதாரணத்திற்கு ஒரு மொபைல் போனை தொடர்ந்து ஒரு வருடத்திற்கு மேல் வைத்துக் கொள்வதில்லை. 

ஒரே மாதியான வாகனம், வாழ்க்கை எல்லாவற்றிலும் ஒரு மாற்றத்தை விரும்புகிறார்கள். 

அதில்தான் அவர்களுக்கு ஒரு ரிலாக்ஸ் இருப்பதாக கருதுகிறார்கள்.

 ஒரு வீடியோவைக் கூட சில நொடிகள், சில நிமிடங்கள் மட்டுமே இவர்களால் பார்க்க முடிகிறது.

தொடர்ந்து ஒரு வீடியோ உரையை ஒரு அரை மணி நேரம் அவர்களால் பார்க்கும் அளவுக்கு அவர்களிடம் பொறுமை இருப்பதில்லை.

அதனால்தான் எல்லாவற்றிலும் ஒரு மாற்றத்தை விரும்புகிறார்கள், அரசியல் உட்பட.

தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட 60 வருடங்களாக தொடர்ந்து இரண்டு கட்சிகளே ஆட்சியில் இருந்து கொண்டிருக்கின்றன.

 அதனால்தான் மாற்றத்தை விரும்புகிறார்கள்.

ஆனால் 60 வருட ஆட்சியில் சலிப்படைந்து மாற்றத்தை விரும்பும் இவர்களின் பெரும்பாலானோரின் வயது 15 லிருந்து 35 வயதுதான்.

பலருக்கு ஓட்டுப் போடும் வயது வரவில்லை. 

சிலர் இப்பொழுதுதான் முதன்முறையாக வாக்களிக்கிறார்கள். மீதியிருக்கும் 23 முதல் 35 வயதுள்ளவர்கள் திமுக, அதிமுக ஆட்சியை அனுபவித்தது கடந்த 10 ஆண்டுகள் மட்டுமே. (2016-2026). 

இதில் தலா 5 ஆண்டுகள் இரு கட்சிகளும் ஆட்சி செய்திருக்கின்றன. இதில்தான் சலித்து போய் மாற்றத்தை வேண்டுகிறார்கள். 

இப்படி ஆட்சி மாற்றம் வேண்டும் என்று நினைப்பவர்களில் இரண்டு வகையினர் இருப்பார்கள். 

முதல் வகையினர் கடந்த ஆட்சியின் அவலங்களைச் சொல்லி இதனால்தான் இந்த ஆட்சி வேண்டாமென்கிறோம் என்பார்கள். 


ஆனால் இரண்டாம் வகையினருக்கு இதல்லாம் தெரியாது. அவர்கள் சொல்லும் ஒரே பதில் ‘ மாற்றம் வேண்டும் ’. 

இப்போது மாற்றம் வேண்டும் என்று எதிர்பார்க்கும் இரண்டு நபர்களைப் பற்றிப் பார்ப்போம். 

முதல் நபர் ஒரு கூலித் தொழிலாளி, அன்றாடங்காய்ச்சி. 

தம் வாழ்க்கையில் எதாவது அதிசயம் நிகழ்ந்து இந்த வாழ்க்கை மாறிவிடாதா என்று எதிர்பார்த்துக் கொண்டிருப்பவர்.

இன்னொருவர், ஐந்திலக்க சம்பளத்தோடு கூடிய ஒரு பணியில் இருந்து கொண்டு குழந்தை, குடும்பம் என்று ஓரளவிற்கு சுகபோகமாக திட்டமிட்டு நகரத்தில் வாழ்பவர்.

 "லைஃப் ஒரே மாதிரி இருக்கு ஒரு சேஞ்ச் வேணும்" என்று நினைப்பவர்.

இருவருமே வாழ்க்கையில் மாற்றத்தை எதிர்நோக்கிக் கொண்டிருப்பவர்கள்தான். 

முதலாம்நபர் வாழ்க்கைத் தரம் உயர்ந்துவிட வேண்டும் என்பதற்காக மாற்றத்தை எதிர்நோக்குகிறார். 

இரண்டாம் நபருக்கு கேளிக்கைக்காக மாற்றம் தேவைப்படுகிறது அதற்காக அவர் ரிஸ்க் எடுத்து வேறொரு கம்பெனிக்கு மாற முடியும்.

இவர்கள் போன்றோரால்தான் இந்த ‘மாற்றம் வேண்டும்’ என்ற கோஷத்துடன் சீமான், கமல்ஹாசன் வந்தனர். 

இந்த இரண்டாம் வகையினர் self sustained ஆக இருந்து கொண்டு ஆட்சியில் ஒரு பரீட்சார்த்த முயற்சியை செய்து பார்க்க விரும்பினர். 

குடுத்துத் தான் பாப்போமே ஏன் புதுசா யாரும் வரக்கூடாதா?’ வரலாம்தான்'

அண்ணாவே அன்றைக்கு புதுசுதான். அண்ணாவுக்குப் பிறகு வந்த கலைஞரும் புதுசுதான். ஜெயலலிதாவுக்குப் பின் வந்த பழனிச்சாமியும் புதுசுதான். 

இப்போது இருக்கும் போன் பழையதாகி விட்டது என்று மாற்ற நினைத்தால்கூட இதை விட பெட்டராக வேண்டும் என்று நினைப்பவர்கள் கூட அரசியலில் அதை நினைப்பதில்லை

காரணம்? 

 நான் நல்லாருக்கேன் எவன் எக்கேடோ கெட்டா எனக்கென்ன. ?

பத்துப்பேர் மாற்றம் வேண்டும் என்று தினமும் சொல்லும் போது நமக்கும் அது தோன்றத்தான் செய்யும். அதுதானே ஊடகத்தின் வேலையாக இருக்கிறது 

இப்போது வாழ்க்கைக்கு அறம் என்பது எப்படி அடிப்படையோ ஒரு அரசியல் கட்சிக்கு கொள்கை அப்படி . 

ஒரு நகை வாங்கும் போது கூட ‘ நாலு கடைக்கு போங்க. நாலு பக்கமும் எஸ்டிமேசன் ஸ்லிப் வாங்கி கம்பேர் பண்ணி அதுக்கப்புறம் தேர்ந்தெடுங்க ’ என்று விளம்பப் படுத்துகிறார்கள். 

நான் சொல்வதும் அதேதான். 

மாற்றம் வேண்டாம் என்று நானும் சொல்லவில்லை. 


 மாற்றாக ஒன்றைத் தேடும் போது அந்த மாற்றம் கொண்டு வரப்போகும் நன்மை தீமைகளையும் ஆராயுங்கள் என்றுதான் சொல்கிறேன். 


அனைத்துக் கட்சிகளின் கொள்கைகளைப் படியுங்கள். 

அவர்களின் பின்னணியை, அவர்களின் கடந்த கால செயல்பாடுகளை பாருங்கள். 

அதன்பிறகு முடிவு செய்யுங்கள் 

 *மாற்றம் வேண்டுமா ? வேண்டாமா ?* என்று.


நாள்: 20.04.2026

சனி, 11 ஏப்ரல், 2026

வாட்ஸ் அப் பகிர்வுக்கு பதில்


09.04.2026 - ல் நாற்பதும் நமதே என்கிற ஒரு வாட்ஸப் குழுவில் பாளை சையது என்பவர்
பதிந்த பகிர்வு  👇👇👇

இஸ்லாமிய பயங்கரவாதிகள் என முதல் முதலில் பெயர் வைத்தது யார் கருணாநிதி அல்லவா ?

கோயம்புத்தூர் சிறைவாசிகளை இவ்வளவு நாட்களாக 27 வருடங்களாக சிறையில் வைத்து அழகு பார்ப்பது யார் கருணாநிதி ஆட்சி அல்லவா ?

வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை என்ற கலிமா சொன்ன இஸ்லாமியர்களை கோயில் குளங்களாக ஏறி இறங்க வைத்தது கருணாநிதி அல்லவா ?

தமிழ்நாட்டில் முஸ்லிம் லீக் என்ற ஒரு கட்சி 27 எம்எல்ஏ சீட்டுகளை வைத்து ஏணிச் சின்னம் என்ற ஒரு தனி அடையாளத்துடன் இருந்தது அதை இன்றும் மாற்றி அமைத்தது கருணாநிதி கட்சி அல்லவா ?

இஸ்லாத்திற்கு ஆறாவது கடமை திமுகவிற்கு வாக்களிப்பது என இஸ்லாமியர்களை சொல்ல வைத்தது கருணாநிதி கட்சி அல்லவா ?

இஸ்லாமியர்கள் ஒன்று சேர்ந்தால் 30 சீட்டுக்கு மேல் வருவார்கள் எம்எல்ஏக்கள் ஆனால் அவர்களை ஒன்று சேரக்கூடாது என்று இன்றுவரை கங்கணம் கட்டி உனக்கு ஒன்று உனக்கு ஒன்று என்று பிச்சை எடுக்க வைத்த இந்த கருணாநிதி கட்சி அல்லவா ?

எம்எல்ஏ சீட்டுகளை சிறுபான்மையினர் அணி என்று நம்மளை இஸ்லாமியர்களை சிறுபான்மையினராக ஆக்கி எனக்கு ஓட்டு போடவில்லை என்றால் பிஜேபி உள்ளே வந்துரும் என்று பயமுறுத்தி வைத்திருக்கும் கருணாநிதி கட்சி அல்லவா ?

கோயம்புத்தூர் கலவரத்தின் போது மூன்று நாள் மௌனம் சாதித்து 19 இஸ்லாமியர்களை கொன்று ஒழித்தது இந்த கருணாநிதி கட்சி அல்லவா ?

ஒவ்வொரு தேர்தல் வாக்குறுதிகளிலும் கோவை சிறைவாசிகளின் விடுதலை செய்வோம் என்று கூறிவிட்டு இன்றுவரை அதை நிறைவேற்றாதது இன்று கருணாநிதி கட்சி அல்லவா ?

அவர்களுக்கு விசுவாசம் ஆக இருப்பது இஸ்லாமிய இயக்கங்கள் இயக்கங்கள் இஸ்லாமியர்களுக்கு செய்யும் துரோகம் இது

                    ***********************

10.04.2026 அன்று கள்ளக்குறிச்சியிலிருந்து கமாலுதீன் அவர்கள் ஆடியோ வாயிலாக  இதற்கு பதில் கொடுத்தார். அதில் நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை என ஒத்துக் கொள்கிறேன். 
ஆனால் வேறு வழி இல்லாததால் திமுகவை ஆதரிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.
நாம் திமுகவை ஆதரித்தால் கை வெட்டப்படும். திமுகவை விட்டு வேறு யாரை ஆதரித்தாலும் அது பாஜகவை ஆதரிப்பதாகவே ஆகும். அதனால் தலை வெட்டப்படும்.
வெட்டுக் கொடுப்பதில் கையா ? தலையா ? என பார்க்க வேண்டும் என்கிற ரீதியில் பேசியிருந்தார்.

அதற்கும் சேர்ந்து என் பதிலை  11. 04.2026 அன்று பகிர்ந்தேன்.

எனது அந்த பதில் பதிவு இதோ 👇👇

அஸ்ஸலாமு அலைக்கும்
தங்கள் கருத்துக்கு நானும் உடன்படுகிறேன்

எரிகிற கொள்ளியில் எந்த கொள்ளி நல்ல கொள்ளி என்று பார்த்து எடுத்துக் கொள்கிற ஜனநாயக கட்டமைப்பில் நாம் இப்பொழுது இருக்கிறோம்.

புறத்திணை சுயம்வர மண்டபத்தில் 
போலி நளன்களின் கூட்டம்
கையில் மாலையுடன் குருட்டு தமயந்தி 

என்று தேர்தலை பற்றி பாடியிருந்தார் கவிக்கோ அப்துல் ரகுமான் 

இன்றைய கால குழலில் நம் முன் நிற்கிற அனைவருமே போலி நளன்கள்தான் 

ஆனால் கையில் வாக்குச்சீட்டுடன் நிற்கும் நாம் யாவருமே குருடர்களாகத்தான் இருக்கிறோம் 

எப்படியும் நாம் தேர்ந்தெடுக்கப் போவது ஒரு போலி நளன் ஆசாமிதான்.

குறைந்த பட்ச நல்லவனைத்தான் நாம் தேர்ந்தெடுக்க முடியும் என்கிறது நம் ஜனநாயக அமைப்பு.

ஓட்டலுக்கு சாப்பிடப் போகிறோம். 
வேறு ஓட்டல் எதுவுமில்லை. 
நமக்கு கடும் பசி. 
சாப்பிட்டே ஆக வேண்டிய கட்டாய நிலை. 

அப்போது அந்த ஓட்டலில் என்ன விற்பனைக்கு இருக்கிறதோ அதைத்தான் நாம் சாப்பிட்டாக வேண்டும். 

அதாவது ஓட்டல்காரன் நம் முன் காட்டும் மெனு கார்டில் இருக்கும் ஏதாவது ஒரு உணவைத்தான் நாம் சாப்பிட்டாக வேண்டும். "எனக்கு இதில் எதுவும் பிடிக்கவில்லை" என்று வேறு கேட்க முடியாது. 

மறுத்து எழுந்து வந்தால் பட்டினிதான் கிடக்க வேண்டும். 

 *இதுதான் தேர்தல் ஜனநாயகம்.* 

இப்பொழுது நம் முன் இருவர் இருந்தால் நாம் யாருக்கு ஆதரவளிப்பது என்று பார்க்கலாம்.

 அதற்கும் *இஸ்லாத்தில் வழிகாட்டல்* இருக்கிறது


*நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் காலத்தில் (கி.பி. 570-632) உலகில் இருந்த இரு பெரும் பேரரசுகள்:* இருந்தன.

1. *பைசாந்தியப் பேரரசு* (Byzantine Empire / Eastern Roman Empire) – கிழக்கு ரோமானியப் பேரரசு என்றும் அழைக்கப்படும். 

இது கிறிஸ்தவ நம்பிக்கையைப் பின்பற்றியது. தலைநகர் கான்ஸ்டான்டினோபிள் (தற்போதைய இஸ்தான்புல்).

2. *சசானியப் பேரரசு* (Sasanian Persian Empire) – பாரசீகப் பேரரசு..

இது ஜோராஸ்ட்ரியன் (நெருப்பு வழிபாடு) மதத்தைப் பின்பற்றியது. தலைநகர் க்டேசிபான்.

இவை இரண்டும் அப்போது உலகின் மிகப் பெரிய சக்திகளாக இருந்தன. 

அரேபியா (அரபு நாடு) இரு பேரரசுகளுக்கும் இடையில் இருந்ததால், அரபுகளிடம் இரு பக்கமும் செல்வாக்கு செலுத்த முயன்றன.

கி.பி. 602 முதல் 628 வரை *பைசாந்திய-சசானியப் போர்* நடைபெற்றது (Byzantine–Sasanian War of 602–628). 

இந்தப் போர் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வாழ்ந்த காலத்திலும் நடைபெற்றிருக்கிறது.  

அப்போது பைசாந்தியர்களுக்கு (ரோமானியர்களுக்கு) நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மற்றும் முஸ்லிம்கள் ஆதரவு தெரிவித்து இருந்தார்கள். 

பாரசீகர்கள் *மஜூஸி* (நெருப்பு வழிபாட்டாளர்கள்) – பலதெய்வ வழிபாட்டு போன்று கருதப்பட்டதாலும்,  

பைசாந்தியர்கள் *“வேதம் பெற்றவர்கள்” (Ahl al-Kitab)* – கிறிஸ்தவர்கள். ஒரே கடவுளை (அல்லாஹ்வை) நம்புபவர்கள். 
அதனால் இஸ்லாமுக்கு மிக நெருக்கமானவர்கள் என்பதாலும் ரோமானியர்களுக்கு அவர்கள் ஆதரவு தந்தார்கள்.

பாரசீகர்கள் (சசானியர்கள்) முதலில் ரோமானியர்களைத் தோற்கடித்தனர். 
ஆனால் மீண்டும் அவர்கள் வெற்றி பெறுவார்கள் என்று திருக்குர்ஆன் அறிவித்தது.  

இது குர்ஆனின் அர்ரூம் (ரோமானியர்) அத்தியாயம் 30, வசனங்கள் 1-5 (குறிப்பாக 2-4) இல் குறிப்பிடப்பட்டுள்ளது. அரபியில்:

الٓمٓ ۚ غُلِبَتِ الرُّومُ ۙ فِىۡۤ اَدۡنَى الۡاَرۡضِ وَهُمۡ مِّنۡۢ بَعۡدِ غَلَبِهِمۡ سَيَغۡلِبُوۡنَ ۙ فِىۡ بِضۡعِ سِنِيۡنَ ؕ لِلّٰهِ الۡاَمۡرُ مِنۡ قَبۡلُ وَمِنۡۢ بَعۡدُ ؕ وَيَوۡمَئِذٍ يَّفۡرَحُ الۡمُؤۡمِنُوۡنَ ۙ بِنَصۡرِ اللّٰهِ​ؕ يَنۡصُرُ مَنۡ يَّشَآءُ ؕ وَهُوَ الۡعَزِيۡزُ الرَّحِيۡمُ​ۚ
தமிழ் மொழிபெயர்ப்பு :
“ரோமர்கள் தோற்கடிக்கப்பட்டனர். (அவர்கள் தோற்கடிக்கப்பட்டது) பூமியின் அருகிலுள்ள (கீழ்ப்பகுதியான) பகுதியில். 

அவர்கள் தோற்கடிக்கப்பட்ட பின்னர் (விரைவில்) வெற்றி பெறுவார்கள். சில வருடங்களுக்குள். முன்னும் பின்னும் அதிகாரம் அல்லாஹ்வுக்கே உரியது. 
அந்நாளில் முஃமின்கள் மகிழ்வார்கள். அல்லாஹ்வின் உதவியினால். 
அவன் தான் நாடியவர்களுக்கு உதவி புரிகிறான். 
அவன் மிகைத்தவன், மிக்க கிருணையுடையவன்.”
இந்த வசனங்கள் இறங்கியபோது (கி.பி. 615-616 அளவில்) ரோமானியர்கள் தோற்ற நிலையில் இருந்தனர். 

ஆனால் கி.பி. 622-628 இல் ஹெராக்லியஸ் பேரரசரின் தலைமையில் ரோமானியர்கள் பாரசீகர்களை தோற்கடித்து வெற்றி பெற்றனர். 
இது குர்ஆனின் முன்னறிவிப்பை உறுதிப்படுத்தியது. 

நபிகள் நாயகம் (ஸல்) ரோமானியர்களின் வெற்றியை முஸ்லிம்களுக்கு மகிழ்ச்சியுடன் அறிவித்தார்.

 *இது குர்ஆனில் நேரடியாக “நபி யாரை ஆதரித்தார்” எனக் கூறப்படவில்லை* என்றாலும், தஃப்சீர்கள் (விளக்கவுரைகள்) மற்றும் வரலாற்றுச் சான்றுகளின்படி நபியின் (ஸல்) ஆதரவு ரோமானியர்களுக்கே இருந்தது என்பதாக சொல்லப்படுகிறது.

இதனடிப்படையில் இன்ஷா அல்லாஹ் எல்லா காலத்திலும் எல்லா விஷயங்களிலும் நாமும் செயல்படலாம் என்று இதை ஒரு வழிகாட்டலாய் நான் கருதுகிறேன்.

மாற்று கருத்தோ, விளக்கமோ இருந்தால் நண்பர்கள் பகிரலாம்


ஜும்மா பயான்களில் அரசியல் கருத்துக்கள்

ஜும்மா பயான்களில் அரசியல் கருத்துக்கள் தேர்தல் முடிந்த மறுநாள் (24.04.2026 ) வெள்ளிக்கிழமை தமிழ்நாட்டின் பெரும்பாலான பள்ளிவாசல்களில் இமாம்...