மாற்றம் வேண்டுவோர் கவனத்திற்கு:
தேர்தல் வந்துவிட்டால் ஊடகங்கள் மைக்கை நீட்டி மக்கள் முன் கருத்துக் கேட்பார்கள். அப்போது பொது மக்கள் இந்த ஆட்சி தொடரலாம் என்றோ இல்லை இந்த ஆட்சி வேண்டாம் என்றோ கூறுவார்கள். அதற்கு அவரவர் அவர்தம் நியாயங்களைக் கூறுவார்கள்.
ஆட்சி தொடரவேண்டும் என்று நினைப்பவர்கள் கடந்த ஐந்து/பத்தாண்டு காலத்தில் அரசாங்கள் செய்த நன்மைகள் அரசினால் தமக்கு கிடைத்த பலன்களைச் சொல்லி இதனால் இந்த ஆட்சியே தொடரட்டும் என்பார்கள்.
ஆனால் ஆட்சி மாற்றம் வேண்டும் என்று நினைப்பவர்களில் இரண்டு வகையினர் இருப்பார்கள்.
முதல் வகையினர் கடந்த ஆட்சியின் அவலங்களைச் சொல்லி இதனால்தான் இந்த ஆட்சி வேண்டாமென்கிறோம் என்பார்கள்.
ஆனால் இரண்டாம் வகையினருக்கு இதல்லாம் தெரியாது. அவர்கள் சொல்லும் ஒரே பதில் ‘மாற்றம் வேண்டும்’.
நிற்க. இப்போது இரண்டு நபர்களைப் பற்றிப் பார்ப்போம்.
முதல் நபர் ஒரு கூலித் தொழிலாளி. மனைவியும் கிடைத்த வேலைகளைச் செய்து கொண்டிருக்கிறார். பிள்ளைகள் அரசுப் பள்ளியில் படித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்தக் குடும்பமே தம் வாழ்க்கையில் எதாவது அதிசயம் நிகழ்ந்து இந்த வாழ்க்கை மாறிவிடாதா என்று பிரார்த்தித்துக் கொண்டிருப்பவர்கள்.
இரண்டாவது நபர் ஒரு மெட்ரோ நகரத்தில் ஐந்திலக்க சம்பளம் வாங்கிக் கொண்டிருப்பவர். குடும்பமும் குழந்தைகளும் உண்டு. அவர்களும் அவருடன் அதே மெட்ரோ நகரில்தான் இருக்கிறார்கள். இவர் இந்த நகருக்கும் வேலைக்கும் வந்து 5 ஆண்டுகள் ஆகி விட்டது என்று நினைத்துக் கொள்ளுங்கள். இப்போது இவரிடம் நீங்கள் கேட்டாலும் ‘எந்திரிக்கிறேன் சாப்பிடுறேன் வேலைக்குப் போறேன் தூங்குறேன். லைஃப் ஒரே மாதிரி இருக்கு ப்ரோ. ஒரு சேஞ்ச் வேணும்’ என்றுதான் சொல்லுவார்.
இருவருமே வாழ்க்கையில் மாற்றத்தை எதிர்நோக்கிக் கொண்டிருப்பவர்கள்தான்.
முதலாம்நபர் வாழ்க்கைத் தரம் உயர்ந்துவிட வேண்டும் என்பதற்காக மாற்றத்தை எதிர்நோக்குகிறார்.
இரண்டாம் நபருக்கு கேளிக்கை தேவைப்படுகிறது. அதற்காக இரண்டாம் நபர் அவர் வாழ்க்கையில் மாற்றத்தைக் கேட்கவே கூடாது என்றில்லை, வேறொரு கம்பெனிக்கு மாறலாம் ஆனால் அறவே தெரியாத ஒரு வேலைக்கு மாறுவது அவருக்கும் குடும்பத்துக்கும் நன்மை தருமா?
இப்போது மீண்டும் அரசியலுக்கு வருவோம். கமல் மக்கள் நீதி மையம் ஆரம்பித்தபோது இந்த ‘மாற்றம் வேண்டும்’ குரல் மேலெழும்பியது. பெரும்பாலும் மேல்தட்டு மக்கள். அவர்கள் self sustained ஆக இருந்து கொண்டு ஆட்சியில் ஒரு பரீட்சார்த்த முயற்சியை செய்து பார்க்க விரும்பினர். ‘குடுத்துத் தான் பாப்போமே ஏன் புதுசா யாரும் வரக்கூடாதா?’ வரலாம்தான். அண்ணாவுக்குப் பிறகு வந்த கலைஞரும் புதுசுதான். ஜெயலலிதாவுக்குப் பின் வந்த பழனிச்சாமியும் புதுசுதான்.
இப்போது இருக்கும் போன் பழையதாகி விட்டது என்று மாற்ற நினைத்தால்கூட இதை விட பெட்டராக வேண்டும் என்று நினைப்பவர்கள் கூட அரசியலில் அதை நினைப்பதில்லை. காரணம்? நான் நல்லாருக்கேன் எவன் எக்கேடோ கெட்டா எனக்கென்ன. ?
பத்துப்பேர் மாற்றம் வேண்டும் என்று தினமும் சொல்லும் போது நமக்கும் அது தோன்றத்தான் செய்யும். அதுதானே ஊடகத்தின் வேலையாக இருக்கிறது இப்போது. வாழ்க்கைக்கு அறம் என்பது எப்படி அடிப்படையோ ஒரு அரசியல் கட்சிக்கு கொள்கை அப்படி.
ஒரு நகை வாங்கும் போது கூட ‘நாலு கடைக்கு போங்க. நாலு பக்கமும் எஸ்டிமேசன் ஸ்லிப் வாங்க கம்பேர் பண்ணி அதுக்கப்புறம் தேர்ந்தெடுங்க’ என்று விளம்பப் படுத்துகிறார்கள்.
நான் சொல்வதும் அதேதான். மாற்றம் வேண்டாம் என்று நானும் சொல்லவில்லை.
மாற்றாக ஒன்றைத் தேடும் போது அந்த மாற்றம் கொண்டு வரப்போகும் நன்மை தீமைகளையும் ஆராயுங்கள் என்றுதான் சொல்கிறேன்.
அனைத்துக் கட்சிகளின் கொள்கைகளைப் படியுங்கள் அதன்பிறகு முடிவு செய்யுங்கள் மாற்றம் வேண்டுமா
வேண்டாமா என்று.
நன்றி. நாஞ்சில் வாழ வந்தார்
18, மார்ச் 2026

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக