வெள்ளி, 8 நவம்பர், 2024

கமல், ரஜினி, சீமானை பி டீம் என்று ஏன் சொல்லுகிறோம்?

கமல், ரஜினி, சீமானை பி டீம் என்று 
ஏன் சொல்லுகிறோம்?





பதிவு செய்த நாள்: 08. 12. 2020

தமிழ்நாட்டில் அதிகமான வாக்கு வங்கியை வைத்திருக்கும் இரு கட்சிகள் அதிமுகவும் திமுகவும் தான். 

2016 சட்டசபை தேர்தலில், அதிமுக 40 சதவிகிதமும், திமுக 31 சதவிகிதமும் வாக்குகளாக பெற்றது. 
அதிமுக அதிக இடங்களில் போட்டியிட்டதும், திமுக கூட்டணிகளுக்கு இடங்களை பகிர்ந்தளித்து போட்டியிட்டதையும் நாம் நினைவில் கொள்ளவேண்டும். 

இந்த தேர்தலில் மாற்று அரசியல் என்று சொல்லி போட்டியிட்டவர்கள் பெற்ற வாக்கு சதவிகிதம் 
நாம் தமிழர் கட்சி (1.09), 
தேசிய முற்போக்கு திராவிட கழகம் (2.41), பாமக (5). 

இதில் பாமகவின் வாக்கு வங்கி எது என்று தெரியும். இவர்கள் மாற்று என்று சொல்லிக்கொண்டாலும், அவற்றில் பெரும்பான்மை வன்னியர் சாதி ஓட்டுகள் மட்டும் தான். அதுவும் 2019 தேர்தலில், பாமகவுக்கு கிடைக்கவில்லை என்பதையும் நாம் மறந்துவிடக்கூடாது. 

மாற்று அரசியல் பேசிய மற்ற கட்சிகள் இன்று திமுக கூட்டணியில் இருப்பதால் அவர்களின் வாக்கு சதவிகதத்தை குறிப்பிடவில்லை. 

2019 தேர்தலை எடுத்துக்கொண்டால், திமுகவின் வாக்குவங்கி 34 சதவிகிதமாக உயர்ந்து இருந்தது. அதிமுகவின் வாக்குவங்கி 19 சதவிகிதமாக குறைந்து இருந்தது. 

ஒரு விசயத்தை நாம் இதன் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

வரும் 2021 தேர்தலிலும் முதல் இரண்டு இடங்களை பெறப்போகும் கட்சிகள் திமுகவும் அதிமுகவும் தான். இந்த தேர்தலில் பாஜக, அதிமுக நேரிடையாக திமுகவை எதிர்ப்பதே தங்கள் அரசியல் என்று சொல்லி களத்தில் நிற்கிறது. இந்த கூட்டணியில் பாமக, கிருஷ்ணசாமி போன்ற சாதி வலதுசாரிகள் இணைவது இயற்கையானது. 

பாஜக - அதிமுகவை நேரிடையாக எதிர்த்து திமுக, இடதுசாரிகள், காங்கிரஸ், விசிக, மதிமுக ஆகிய கட்சிகள் களத்தில் நிற்கிறது. 

இந்த மேற்சொன்ன கட்சிகளுடன் கூட்டணி இல்லாமல், தனியாக மாற்று அரசியல் என்று சொல்லிக்கொண்டு களம் காண அதிக வாய்ப்பு இருப்பவர்கள்
கமலின் மய்யமும், ரஜினியின் பெயர் அறிவிக்கப்படாத கட்சியும், சீமானின் நாம் தமிழர் கட்சியும் தான். இதில் நாம் தமிழர் 2016ல் போட்டியிட்டு அவர்களின் வாக்கு சதவிகிதத்தை அறிந்த கட்சி. கமலுக்கும் ரஜினிக்கும் அவர்களின் வாக்குவங்கி தெரியாது.

ஆனால், அவர்களுக்கு கிடைக்கபோவது அதிகபட்சமாக 5 சதவிகிதம் தான். இதை புரிந்துக்கொள்ள பெரிய அரசியல் ஞானம் எல்லாம் தேவையில்லை. தமிழ் நாட்டு தேர்தல்களை கொஞ்சம் உன்னிப்பாக பார்த்தாலே புரியும். 

சரி, மாற்று அரசியல் என்று சொல்லி இவர்கள் போட்டியிடுவதை தடுக்க முடியுமா?
முடியாது. அது ஜனநாயகமும் இல்லை. 

34 சதவிகித ஓட்டு வங்கியை வைத்திருக்கும் திமுக கமல், ரஜினியை பார்த்து பி டீம் என்று சொல்வது ஏன்? பயமா? 

அரசியல் என்பது என்னைப்பொறுத்தவரை எப்போதும் "Opposing the Greatest Evil" என்பது தான்.அதாவது யார் ஜெயிக்கக்கூடாது? என்பது தான் தேர்தல் அரசியல்.
திமுக கூட்டணியை பொறுத்தவரை, தமிழ்நாட்டின் பலமான எதிரி அதாவது "Greatest Evil" அதிமுக - பாஜக கூட்டணி தான். 

அதிமுக-பாஜக கூட்டணியை பொறுத்தவரை, தமிழ்நாட்டின் பலமான எதிரி அதாவது "Greatest Evil" திமுக கூட்டணி தான்.  

இந்த தெளிவில்லாமல், அல்லது தெளிவாக இருக்கக்கூடாது என்று குழப்புவதற்காகவே களம் காண்பவர்கள் தான் மய்யம்,மாற்று அரசியல், சிஸ்டம் சரியில்லை அரசியல், தமிழ் தேசிய அரசியல் என்பதெல்லாம். 

இவர்கள் யாரை எதிர்க்கிறார்கள் என்று நீங்கள் கேட்டால்,பொதுவாக நாங்கள் அனைத்தையும் எதிர்க்கிறோம் என்று சொல்வார்கள். அதாவது,நாங்கள் அவர்களையும் எதிர்க்குறோம்,
இவர்களையும் எதிர்க்கிறோம் என்று சொல்வார்கள். அரசியலில் இது தெளிவின்மையை தான் காட்டுகிறது. 

திமுக அதிமுகவிற்கு மாற்று என்ற கட்டம் தமிழ்நாட்டிற்கு இன்றும் வரவில்லை. ஏனெனில், அப்படி அவர்களை மாற்றக்கூடிய கொள்கை தெளிவுள்ள கட்சி இவர்கள் இல்லை என்பதால் தான் மக்கள் மாற்று அரசியல் என்று வருபவர்களை புறக்கணிக்கிறார்கள். 

சரி, திமுக ஏன் இவர்களை பி டீம் என்று சொல்கிறது?

மேலே சொன்னதை வைத்து நீங்களே புரிந்துக்கொள்ளலாம். 
முதல் இரண்டு இடம் 2021 தேர்தலில் திமுக மற்றும் அதிமுகவிற்கு தான் கிடைக்கப்போகிறது.
திமுகவிற்கு முதல் இடம் கிடைத்தால், தமிழ்நாட்டு மக்கள் மிகத்தெளிவாக, யார் தங்களது "Greatest Evil" என்று முடிவெடுத்து இருக்கிறார்கள் என்றுப் பொருள். 
திமுக மீண்டும் ஒருவேளை 2016 போல இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டால், அதற்கு மக்கள், இந்த மாற்று அரசியல் புரட்டுகளுக்கு வீழ்ந்து வாக்குகளை சிதறடித்தது ஒரு காரணமாக இருக்கலாம். 

ஒன்றை இவர்கள் மறந்துவிடுகிறார்கள். திமுக காரர்கள் அதிகம் கவலைப்படுவது தங்கள் கூட்டணி ஜெயிக்கவேண்டும் என்பதை விட, மீண்டும் இந்த மோசமான அதிமுக - பாஜக கள்ளக்கூட்டணி அரசு தொடரக்கூடாது என்பது தான்.  

இந்த மாற்று அரசியல் பேசும் கட்சிகளை ஆதரிப்பவர்கள் இவ்வளவு எல்லாம் சிந்திப்பதில்லை.
அவர்களை பொறுத்தவரை, தாங்கள் தான் தூய்மை அரசியலின் முகவர்கள் என்று தங்களை தாங்களே ஏமாற்றிக்கொண்டு, எதிரிகளுக்கு துணைபோகிறார்கள். 

மேலே சொன்னது போல, அவர்கள் போட்டியிடுவதை நாம் தடுக்கமுடியாது. அவர்கள் போட்டியிடட்டும். ஆனால், அவர்களின் அரசியல் யாருக்கு சாதகமாக இருக்கப்போகிறது என்பதை நாம் பேசித்தான் ஆகவேண்டும். அவர்கள் பி டீம் என்று நாம் குற்றம் சொல்லித்தான் ஆகவேண்டும். தாங்கள் பி டீம் இல்லை என்பதை அவர்கள் தான் நிரூபிக்க வேண்டும்..

அதற்கு முதல் படி, தமிழ்நாட்டின் "Greatest Evil" யார் என்ற கேள்வி தான். இந்த கேள்விக்கு பதிலே, அவர்களை அம்பலப்படுத்தி விடும். வேண்டுமானால், முயற்சித்து பாருங்கள்.

- ராஜராஜன் ஆர்.ஜெ


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ரஜினியின் குடும்பம்

ரஜினியின் குடும்பம் காமெடி நடிகர் ஒய்.ஜி.மகேந்திரனின் அப்பா ஒய்.ஜி.பார்த்தசாரதி. புகழ்பெற்ற அமெச்சூர் நாடகக் குழுவை நிறுவி நடத்திய நடிகர். ப...