வெள்ளி, 8 நவம்பர், 2024

இஸ்லாமியர்களுக்கு ஒரு வேண்டுகோள்

 இஸ்லாமியர்களுக்கு ஒரு வேண்டுகோள்


பதிவு எழுதிய நாள் : 13.12.2020


ஒற்றுமை என்னும் கயிற்றைப் பற்றிப் பிடிக்க வேண்டிய இஸ்லாமிய சமுதாயம் பல இயக்கங்களாக பிளவு பட்டு நிற்கிறது.

 எப்போதும் இல்லாத சூழ்நிலையில் மிகவும் முக்கியமான காலகட்டத்தில் தமிழக சட்டமன்ற தேர்தல் எதிர் வர இருக்கின்றது.

மேலே சொல்லப்பட்டுள்ள இரு கருத்துக்களும் எப்பொழுதுமே காலம் தவறாமல், வார்த்தை மாறாமல் சொல்லப்பட்டு வருகிறது.

உண்மைதான்.

தமிழகத்தை மதவெறி அரசியல் சூழ்ந்திருக்கிறது.

இந்தியாவின் எல்லா மாநிலத்துக்குள்ளும் காலூன்றி விட்ட பாஜக தமிழகத்திலும் காலூன்ற பகீரதப் பிரயத்தனம் செய்து வருகிறது.

இது ஊரறிந்த இரகசியம்.

நேரடியாக இறங்கி தன் நெடுநாள் இலட்சியங்களை அடைய முடியாது என்பதால் பதுங்கி இருந்து, திரைமறைவில் காய்களை நகர்த்தி வருகிறது.

ஆளும் அதிமுக அரசை விழுங்கி ஏப்பம் விட்டு விட்டது.

உதிரிக் கட்சிகளை குத்தகைக்கு எடுத்து கம்பெனி ஆர்ட்டிஸ்டுகளாக 

வைத்திருக்கிறது.

சில சிறு கட்சிகளை / அமைப்புக்களை உருவாக்கி விட்டிருக்கிறது.

எதிர்கட்சியின் கூட்டணிக்குள் கூட தன் .--- வைத்திருக்கலாம்.

ஏனெனில் காங்கிரஸில் இருந்து பிரிந்து ஜனசங்கம் ஆரம்பிக்கப்பட்டபோது ஜனசங்கக் கொள்கை கொண்ட அனைவரும் ஜனசங்கத்திற்கு வந்து விடவில்லை. பலரை காங்கிரசுக்குள்ளேயே தொடர்ந்து இருக்க ஜனசங்கம் விட்டு வைத்தது. அது இன்றும் தொடர்கிறது .

இன்னமும் காங்கிரசுக்குள் இருந்து கொண்டே பாஜக - வுக்கு பணியாற்றுபவர்கள் இருந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.

அதனால்தான் கட்சியை கட்டுக்குள் கொண்டு வர ராஜீவ், ராகுல் போன்றோரால் முடியவில்லை.


தமிழகத்தில் இப்பொழுது பாஜக தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் கமல், ரஜினி, சீமான் போன்றவர்களின் உதிரி கட்சிகளைக் கொண்டு தமிழக மக்களை குழப்பத் திட்டமிடுகிறது.

தங்கள் கட்சி தனியாக நின்றோ அல்லது ஒருவருக்கொருவர் கூட்டணி சேர்ந்து நின்றோ வெற்றி பெற்று தங்களால் ஆட்சியைப் பிடிக்க முடியாது என்று இவர்கள் அனைவருக்கும் நன்கு தெரியும்.

ஆனாலும் தனித்தனியாகவோ அல்லது சிலருடன் கூட்டணி வைத்தோ தேர்தலில் நிற்பார்கள்.

தான் வெல்லப் போவதில்லை என்று தெரிந்தும் தேர்தலில் நிற்கிறார்கள்.


வெகு ஜனம் தெளிவாக இருக்கக்கூடாது என்று குழப்புவதற்காகவே களம் காண்பவர்கள் தான் மய்யம்,மாற்று அரசியல், சிஸ்டம் சரியில்லை அரசியல், தமிழ் தேசிய அரசியல் என்பதெல்லாம். 


இவர்கள் யாரை எதிர்க்கிறார்கள் என்று நீங்கள் கேட்டால்,பொதுவாக நாங்கள் அனைத்தையும் எதிர்க்கிறோம் என்று சொல்வார்கள். அதாவது,நாங்கள் அவர்களையும் எதிர்க்குறோம்,

இவர்களையும் எதிர்க்கிறோம் என்று சொல்வார்கள். 

தான் வெல்லப் போவதில்லை என்று தெரிந்தும் ஏன் இவர்களில் தேர்தலில் நிற்கிறார்கள்?

அவர்களின் இலக்கு யார் வெல்ல வேண்டும் என்பதல்ல. 

யார் வென்று விடக் கூடாது என்பது தான்

இந்த ஒற்றைக் கொள்கைக்காக திரைமறைவில் ஒன்றுபட்டு செயல்பட இருக்கிறார்கள்.

இஸ்லாமிய சமுதாய மக்கள் பலரும் பல கட்சிகளில் இருக்கலாம். அது ஜனநாயகம்.

ஆனால் முழு இஸ்லாமிய சமுதாயமும் ஒரு ஒற்றைக் கொள்கைக்காக செயல்பட வேண்டிய தருணம் இது.


இப்பொழுது யாருக்கு வாக்களிக்கக் கூடாது? என்பதை விட யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று தீர்மானிக்க வேண்டிய தருணம்.


பாஜக வின் பொம்மை அரசாக அதிமுக செயல்படுகிறது.

பாஜகவை எதிர்ப்பது போல் காட்டிக் கொண்டாலும் கூட பாஜகவின் தற்போதைய எதிரிக் கட்சியான திமுகவுக்கு எதிராகவே அதன் கம்பெனிக் கட்சிகள் கங்கணம் கட்டிக் கொண்டு நிற்கின்றன.

எந்தப் பிரச்னையைப் பற்றிப் பேசினாலும் இந்தக் கட்சிகள் இறுதியில் அந்தப் பிரச்னையின் காரண கர்த்தாவாக ஆளும் கட்சியான அதிமுகவை குறை சொல்லாமல் பத்தாண்டுகளாக ஆட்சியிலேயே இல்லாத திமுகவையே கை காட்டுகின்றன.

பாஜகவுக்கு எதற்கெடுத்தாலும் பாகிஸ்தான்தான் காரணம் என்பது போல பாஜக கம்பெனி கட்சிகளுக்கு திமுக.

வளர்ச்சி என்ற போலி பிம்பத்தை விஸ்வரூபமாகக் காட்டி ஆட்சிக்கு வந்த பாஜக அரசால் இன்றைக்கு அனைத்து துறைகளும் பின்தங்கிப் போய் கொண்டேதான் இருக்கின்றன.

பாஜகவின் இலக்கு அகண்ட இந்துஸ்தானம், இஸ்லாமிய எதிர்ப்பு / ஒழிப்பு.

இந்த இந்துத்துவா அரசியல் கொள்கையை அவர்கள் விட்டு விடத் தயாரில்லை. விட வே மாட்டார்கள்.

இதற்காக இவ்வளவு காலம் பொறுத்திருந்து காலங்காலமாக திட்டங்கள் தீட்டி, அவற்றை செயல்படுத்தி ஆட்சிக்கு வந்திருக்கிறார்கள். 

அவர்கள் அஜெண்டாவில் இருக்கும் அனைத்து அம்சங்களையும் நிறைவேற்றவே செய்வார்கள். செய்து கொண்டும் இருக்கிறர்கள்.

இவற்றிற்காக எதையும் செய்ய தயங்க மாட்டார்கள்.

ராமர் கோவில், காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து, பசு பாதுகாப்பு, மத மாற்றத் தடைச் சட்டம், முத்தலாக் தடைச் சட்டம் , சி ஐ ஏ (CIA), என்.ஆர்.சி (NRC) போன்ற பல அம்சங்கள் பாஜகவின் அஜெண்டாவில் உள்ளன.

இரு நாட்களுக்கு முன்னர் "கொரோனா பரவல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட CIA. NRC சட்டம் ஜனவரியில் மீண்டும் செயல்படுத்தப்படும் " என்ற பாஜக அரசின் அறிவிப்பு வெளியாகி இருக்கிறது என்பதைக் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.


நாம் எதிரியைத் தேடவில்லை. 

ஆனால் நம்மை எதிரியாகப் பார்த்து நமக்கு எதிராக செயல்படுபவர்களுக்கு எதிராக நிற்பவர்கள் பக்கம் இப்பொழுது நாம் நின்றாக வேண்டும்.


பாஜகவின் தற்போதைய எதிரிக் கட்சி தமிழகத்தில் திமுகதான்.

இப்பொழுது அதை சமுதாயம் ஆதரித்தேயாக வேண்டிய சூழல்.

மற்ற கட்சிகள் பாஜகவை எதிர்ப்பது போல் காட்டிக் கொண்டாலும், பாஜக குறிவைத்து தாக்குவதும், எதிர்ப்பதும் என்னவோ திமுகவை மட்டும்தான்.

அதனால்தான் திமுகவை இஸ்மாயியர்கள் ஆதரித்தேயாக வேண்டும்.

நாளை காலச் சக்கர ஓட்டத்தில் சூழல் மாறி திமுக, பாஜகவுடன் உறவு வைத்துக் கொண்டாலும் கூட நமக்காக திமுக குரல் கொடுக்கும். இது கடந்த கால அனுபவம். (கோவை வெடிகுண்டு சம்பவத்தில் திமுக நேர் எதிராக செயல்பட்டது என்பதும் கூட நமக்கு ஒரு பாடமே)

ஒரு வேளை நாளை நமக்கு எதிராக திமுக செயல்பட்டால், இன்ஷா அல்லாஹ் நாம் அதற்கு ஜால்ரா அடித்துக் கொண்டிருக்க வேண்டியதில்லை.

அதாவது நாளை நடப்பதை அன்றைக்கு பார்த்துக் கொள்வோம்.

ஆனால் இன்று செய்ய வேண்டியதை செய்தாக வேண்டும்.

இஸ்லாமியர்களின் ஓட்டுக்கள் தமக்கு கிடைக்காது என்பது தெளிவாகவே பாஜக -வினருக்குத் தெரியும். அதை அவர்கள் எதிர்பார்ப்பதுமில்லை.

அவர்கள் திட்டம் ஓட்டுக்கள் சிதற வேண்டும். சிதறலில் மீதமாகும் குறைந்த பட்ச ஓட்டு வித்தியாசத்தில் அடிமை அ தி மு க வெல்ல வைத்து தங்கள் திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும்.

நாட்டில் சட்டம், ஒழுங்கு, நீதித்துறை மற்றும் தொலைக்காட்சி, பத்திரிக்கை போன்ற ஊடகங்கள் எப்படி ? யாருக்காக செயல்படுகின்றன? என்பதை அனைவரும் அறிவோம்.

இவற்றைக் கொண்டு இஸ்லாமிய சகோதர அமைப்புக்களை பிரித்து ஒருவருக்கொருவர் எதிர்த்து செயல்பட வைக்கும் தந்திரங்களை ஆளும் பாஜக செய்யும்.

அதனால் பலனடையப் போவது பாஜக தான் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

பணம், பொருள், பதவி இவற்றிற்காக எதையும் செய்வோர் எங்கும் உண்டு.

இத்தனை காலம் சும்மா கிடந்தவர்கள் திடீரென கொள்கை முழக்கமிட்டு, வீராவேசம் பேசிக் கொண்டு தம்மை நோக்கி "அழைப்பார்கள்".

நன்றாக புரிந்து கொள்ளுங்கள்.

நம்மைக் கூட்டி, அந்தக் கூட்டத்தைக் காட்டி, நம்மை விலை பேசி விற்று "சூட்கேஸ்" பார்த்து விடுவார்கள் நம் சமுதாயக் காவலர்கள்.

அவர்களை கவனமாக நாம் கடக்க வேண்டும், தவிர்க்க வேண்டும்.

அவர்களுக்குப் போடும் ஓட்டும், அதிமுகவுக்குப் போடும் ஓட்டும் ஒன்று தான்.

அதிமுகவுக்காக நீங்கள் போடும் ஒவ்வொரு ஓட்டும் பாஜகவுக்கே போடும் ஓட்டாகவே அமையும்.

ஏனெனில் அதிமுகவை வைத்து நிழல் ஆட்சியை நடத்தி வருவது பாஜகதான் என்பதும் ஊரறிந்த இரகசியம்

இனிமேலும் தமிழகத்தில் அதையேதான் பாஜக செய்யும்.


ஆகவே இஸ்லாமிய சமுதாயம் குறைந்த பட்ச கொள்கை ஒப்பந்த அடிப்படையில் திமுக கூட்டணியை ஆதரிக்க வேண்டிய , கட்டாய சூழ்நிலையில் இருக்கிறது


சமுதாயத்தின் பொது பிரச்னைகளை, கோரிக்கைகளை திமுக கூட்டணியிடம் இப்பொழுது வைத்தாக வேண்டும்.

காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து, பசு பாதுகாப்பு, மத மாற்றத் தடைச் சட்டம், முத்தலாக் தடைச் சட்டம் , சி ஐ ஏ (CIA), என்.ஆர்.சி (NRC) போன்ற முஸ்லீம்களை குறி வைத்து இயற்றப்பட்ட சட்டங்களை தேசிய அளவில் வெளிப்படையாக எதிர்க்க வேண்டும். மாநில அளவில் அவற்றை அமுல்படுத்தாமல் இருக்க சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.

கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் முஸ்லீம்களுக்கு வழங்கப்பட்டு வரும் 3.5% சதவிகித இட ஒதுக்கீடை 5% சதவிகிதமாக உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.


கட்சியிலும், சட்டசபை, பாராளுமன்றம் போன்றவற்றிலும் முஸ்லீம்களுக்கு கட்சி சார்பில் பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும்

இது போன்ற பொதுவான பல கோரிக்கைகளை முன் வைக்கலாம்

என்னை விட விபரமறிந்தவர்கள் இயக்கங்களின் தலைமைகளில் உள்ளனர்.

அவர்கள் சமுதாயத்திற்காக சொந்த விருப்பு, வெறுப்புக்களை, ஈகோவை ஒதுக்கி விட்டு ஒன்று கூடி முடிவெடுக்க வேண்டும்


"இறைவன் மீது நம்பிக்கை வையுங்கள். அதே சமயம் ஒட்டகத்தையும் கட்டி வையுங்கள்" என்றார்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள். 


இன்ஷா இவை நடைபெற நாம் முயற்சி செய்வோம்.

வல்ல அல்லாஹ் நிறைவேற்றித் தருவானாக. 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ரஜினியின் குடும்பம்

ரஜினியின் குடும்பம் காமெடி நடிகர் ஒய்.ஜி.மகேந்திரனின் அப்பா ஒய்.ஜி.பார்த்தசாரதி. புகழ்பெற்ற அமெச்சூர் நாடகக் குழுவை நிறுவி நடத்திய நடிகர். ப...