வெள்ளி, 25 ஏப்ரல், 2025

பஹல்காம் படுகொலைகள் - ஒரு பார்வை

 பஹல்காம் படுகொலைகள் 

ஒரு பார்வை


இரண்டு நாட்களுக்கு முன்பு (22.04.2025) காஷ்மீர் பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகளின் மீது பயங்கரவாதிகள்  நடத்திய துப்பாக்கி தாக்குதல் மூலம் 27 அப்பாவி பயணிகளை கொலை செய்திருக்கிறார்கள்.

 இதற்கு "லஷ்கர் இ தொய்யிபா"வின் சக அமைப்பான தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் (The Resistance Front - TRF) என்ற பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது என்று செய்திகள் வெளி வந்திருக்கின்றன. 

அப்பாவி மக்களின் மீதான் இந்த கொடும்  தாக்குதல் கடும் கண்டனத்திற்குரியது. இதில் யாருக்கும் மாற்றுக் கருத்தில்லை.

ஆனால் 

1..இந்த தாக்குதல் மூலம் அந்த பயங்கரவாதிகள் உலகிற்கு என்ன சொல்ல வருகிறார்கள் ? 

2.. இதனால் அவர்கள் அடையும் இலாபம் என்ன ?

3.. இப்படி செய்யச் சொல்லி இவர்கள் பின்பற்றும் இஸ்லாம் வழிகாட்டுகிறதா?

4.. இந்த தாக்குதலால் இந்தியாவில் குறிப்பாக காஷ்மீரில் ஏற்படும் பின் விளைவுகள் எப்படி இருக்கும் ?

5.. இந்த தாக்குதல் மூலம் யாருக்கு அதிக பாதிப்பு  இருக்கும் ? 

6.. இதனால் அதிக இலாபம் யார் அடைவார்கள்?

இவற்றை எல்லாம் இப்போது யோசிக்க வேண்டியிருக்கிறது


இந்த தாக்குதல் மூலம் பயங்கரவாதிகள் தாங்கள் பெரிய 'பிஸ்தாக்கள்' என உலக மக்களை அச்சுறுத்துகிறார்கள். ஆனால் உண்மையில் இவர்கள் உலக மக்களின் பார்வையில் இருந்து, அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு பயந்து ஒளிந்து வாழும் கோழைகள். 

இதனால் அவர்கள் எந்த நன்மையும் அடையப் போவதில்லை. 

மாறாக துன்பங்கள்தான் தொடரப் போகின்றன. வேட்டையாடப்படுவார்கள். 

தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் ஓடி ஓடி ஒளிந்து கொண்டால், அகப்படுபவர்கள் பயங்கரவாதிகளாக அறிவிக்கப்பட்டு பலி / பழி வாங்கப்படுவார்கள்.

மற்றபடி இந்த தாக்குதலால் பத்து பைசா பிரயோஜனம் கூட அவர்களுக்கு இருக்காது. 

ஒரு வேளை பாகிஸ்தான் மூலம் ஆதாயம் கிடைக்கலாம்.

இஸ்லாம் தன் வரலாற்றில் போர்களை எதிர் கொண்டிருக்கிறது. போர் நெறிகளை கடைப்பிடித்திருக்கிறது. எந்த காலத்திலும் இப்படி அப்பாவி மனிதர்களை கொல்ல அனுமதித்ததில்லை.

போர்கள், தண்டனை இவற்றைக் தவிர ஒரு உயிரை எடுப்பதற்கு இஸ்லாம் அனுமதிப்பதில்லை. 

இஸ்லாமிய கோஷங்களோடு ஒரு பயங்கரவாத தாக்குதலை செய்வதால் அது இஸ்லாம் அனுமதித்த முறையாகாது.



இந்த தாக்குதலால் ஏற்பட இருக்கும் பின் விளைவுகளை பற்றி அந்த பயங்கரவாதிகள் யோசித்துப் பார்த்திருந்தால் இதைச் செய்திருக்க மாட்டார்கள். 

மூளைக் சலவை செய்யப்பட்டவர்கள் யோசிக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

ஏற்கனவே காஷ்மீரில் இராணுவ கண்காணிப்பு பலமாக இருக்கிறது. இப்பொழுது இந்த தாக்குதலுக்குப் பிறகு அது இன்னமும் நெருக்கப்படும். அனைவரும் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்படுவார்கள். 

ஏனெனில் இராணுவ உடமைகளையும், உயிர்களையும், பொது மக்களையும் பொதுச் சொத்துக்களையும் தங்கள் உயிர்களையும் பொருட்படுத்தாது பாதுகாக்க வேண்டிய 'ரிஸ்க்'கும் பொறுப்பும் துணை நிலை பாதுகாப்பு படைகளுக்கு உள்ளது. 

இதனால் பொது அமைதி, வெகுஜன சுதந்திர வாழ்க்கை சீர் குலையும். நிம்மதியின்மை, ஸ்திரமற்ற தன்மை நிலவும்.

பெரும்பான்மை இஸ்லாமியர்களின் வாழ்க்கை வருமானம் சுற்றுலா பயணிகளின் மூலமே இருக்கிறது.

பயணிகள் வருகை தடை பட, வருமானம் குறைந்து, அடிப்படை வாழ்க்கை ஆட்டம் காணும். 

ஒரு புறம் இராணுவ துணை நிலைப் படையினர், மறு புறம் பயங்ரவாதிகள் என இரு பக்க அச்சுறுத்தல்களோடு வாழ்வது நரக வாழ்க்கையாக இருக்கும்.

ஆகவே இது போன்ற தாக்குதல்களால் தங்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுகிறது என்பதால் எந்த காஷ்மீர் மக்களும் இதை ஆதரிப்பதில்லை. 

அதே போல் எந்த இந்தியக் குடிமகனும் இது போன்ற தாக்குதல்களை ஏற்பதுமில்லை. 

ஏனெனில் பஹல்காமில் தாக்குதல் நடந்தால் ஒட்டு மொத்த தேசமுமே பாதுகாப்பை நோக்கி நகர வேண்டியிருக்கிறது. தங்களது இயல்பு வாழ்க்கைகள் ஊருக்குத் தகுந்தாற்போல் பாதிப்பை அடைகின்றன.

இந்த நிகழ்வால் யாருக்கு இலாபம் ? யார் அதிக பயனடைவார்கள் ? என்பதை யோசிக்கத் தெரிந்த எந்த இந்தியக் குடிமகனாலும் எளிதில் சொல்லி விட முடியும்.

இந்த பயங்கரவாதத் தாக்குதலை நடத்தியவர்கள் இஸ்லாமியர்கள் என்பதாலும், தாக்குதலுக்கு உள்ளானவர்கள் இந்துக்கள் என்பதாலும் இது இந்து - முஸ்லீம் விரோத செயல்பாட்டு கருத்தாக வெகுஜன மக்களிடம் பரப்பப்படுகிறது. 

தேசம் முழுவதும் இஸ்லாமிய வெறுப்புணர்வு பிரச்சாரம் முடுக்கி விடப்பட்டிருக்கிறது.

மோர்பி பாலத்தில் 141 பேர் இறந்தபோது வராத, 

புல்வாமாவில் 40 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்ட போது வராத, 

பெருவெள்ளத்தில் பாதிக்கப்பட்டிருந்த தமிழ்நாட்டைக் காணவராத, 

வன்முறைகளால் பற்றி எரிந்த, எரிந்து கொண்டிருக்கும் மணிப்பூருக்கு  வராத, 

மகாராஷ்ட்ரா, உ.பி மாநிலங்களில் சட்டம் ஒழுங்கு மோசமடைந்து பெரும் கலவரங்கள் நடந்து போதும் வராத 

-- பிரதமர் மோடியும் அமித்ஷாவும் பதறுவதும் உடனடியாக ஜம்முகாஷ்மீர் போவதும் வித்தியாகமாக படுகிறது.

சவுதி அரேபியாவின் சுற்றுப் பயணத்தை பாதியில் முடித்து விட்டு மோடி காஷ்மீர் திரும்புகிறார்.

சிவப்புக் கம்பள வரவேற்போடு வரும் அமித்ஷா 26 உடல்களையும் வெள்ளைப் பெட்டியில் வைத்து அஞ்சலி செலுத்தி அதை மீடியாவில் காட்டச் செய்கிறார்.

முந்தைய காங்கிரஸ் ஆட்சிகளில் இது போன்ற சம்பவங்கள் நடந்தால் அது ஆளும்கட்சியின் கவனக் குறைவு, 

ஆட்சியின் திறமையின்மை என எழுதிய பத்திரிக்கைகள் இன்று 

'அமித்ஷா கண் சிவந்தார், 

மாஸ்டர் பிளான் போட்ட மோடி, 

*பாக். எல்லை மூடப்பட்டது*.

*பாகிஸ்தானின் X - தளப் பக்கம் மூடப்பட்டது*' 

என்று தலைப்பில் பிரேக்கிங் நியூஸ் வெளியிடுகின்றன.

இந்துவா ? முஸ்லீமா ? எனக் கேட்டு பார்த்து சுட்டார்கள் என பரபரப்புச் செய்திகள் வெளியிட்ட மீடியாக்கள் பல வெளியூர் சுற்றுலா பயணிகளை உள்ளூர் முஸ்லீம் மக்கள்தான் காப்பாற்றினார்கள் என பல பொதுமக்கள் கொடுத்த பேட்டிகளை செய்திகளாக வெளியிட தயங்குவது ஏனோ?

தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதால்  இந்த பயங்கரவாத தாக்குதலைக் கண்டித்து உள்ளூர்வாசிகள் கடையடைப்பும், போராட்டமும் செய்வது அரசை எதிர்த்து செய்வதாக இந்த ஊடகங்கள் செய்திகள் வெளியிடுகின்றன.

வக்பு சட்டத்திற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பும், உச்சநீதி மன்றத்தின் கடும் விமர்சனமும் எழுந்த வேளையில்.. காஷ்மிரில் இந்த தீவிரவாத தாக்குதல் நடைபெற்று இருக்கிறது! 

எப்போதெல்லாம் ஆளுங்கட்சிக்கு பிரச்னை வருகிறதோ அப்போதெல்லாம் எல்லையில் தீவிரவாதி ஆளுங்கட்சியை காப்பாற்ற வந்து விடுகிறான்.

நாலு நாதாரி நாய்கள் செய்யும் வெறிச் செயல்களால் நாடு முழுவதும் இருக்கும் இஸ்லாமியர்கள் தங்கள் தேசபக்தியை மெய்ப்பித்துக் காட்டிக் கொண்டே இருக்க வேண்டி இருக்கிறது.

ஆனால் மற்ற இந்தியக் குடிமகன்கள் தங்கள் தேசபக்தியை வெளிக்காட்ட வேண்டிய அவசியமே இல்லாமல் இருப்பது அவர்களுக்கு ஒரு உரிமை, சவுகரியம் என்பது ஒரு நகைமுரண்.

இந்தியாவில்  பின்வரும் மாநிலங்களில் அடுத்து தேர்தல்கள் நடைபெற உள்ளன:

பிகாரில் 2025 நவம்பரிலும், 

2026, ஏப்ரல்-மே - யில் 

அசாம்,கேரளா, மேற்கு வங்காளம், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களிலும் சட்டமன்றத் தேர்தல்கள் வரவிருக்கின்றன.

முந்தைய வரலாற்றைப் பார்த்தால் 2019 பிப்ரவரியில் *புல்வாமா தாக்குதல்* நடந்த பிறகு, இந்தியாவில் ஏப்ரல், மே யில் பொதுத் தேர்தலும் கூடவே ஆந்திரா, அருணாச்சலப் பிரதேசம், சிக்கிம் மற்றும் ஒடிசா ஆகிய நான்கு மாநில சட்டமன்றங்களுக்கும் தேர்தல்கள் நடைபெற்றன

புல்வாமா தாக்குதல் மக்களவை மற்றும் மாநில சட்டமன்றத் தேர்தல்களின் பின்னணியில் முக்கிய அரசியல் தாக்கத்தை ஏற்படுத்தியது, 

குறிப்பாக தேசிய பாதுகாப்பு மற்றும் தீவிரவாத எதிர்ப்பு விவாதங்களை மையப்படுத்தியது என்றும்,

மேலும், இது இந்தியாவின் அரசியல் களத்தில் குறிப்பிடத்தக்க நிகழ்வாக இருந்தது என்றும் Groke சொல்கிறது


அதற்கு பிறகு

2019 அக்டோபர் - நவம்பரில்

ஹரியானா: மகாராஷ்ட்ரா, ஜார்க்கண்ட்ஆகிய மாநிலங்களிலும் தேர்தல்கள் நடைபெற்றன. 

இதில் நாட்டின் வளர்ச்சி பற்றிய பிரச்சாரத்தை விட தேசிய பாதுகாப்பு மற்றும் தீவிரவாத எதிர்ப்பு பற்றியே இங்கும் பாஜகவால் பிரச்சாரம் செய்யப்பட்டது. 

இதில் பாஜக பெருமளவில் வெற்றியும் கண்டது.

இதனடிப்படையில் பார்த்தால் இந்த தாக்குதலால் பாதிக்கப்பட்டிருப்பவர்கள்  உயிரை இழந்த சுற்றுலா பயணிகள்,  அவர்கள் குடும்பத்தார்கள், காஷ்மீரின் உள்ளுர்வாசிகள் மற்றும் துணை நிலைப் படையினர்கள் ஆகியோராவார்கள். 

இவர்கள் யாருக்கும் எந்த ஆதாயமும் இல்லை.

இதில் எந்த அரசியல் கட்சிக்கும் எந்த ஆதாயம் இல்லை பாஜகவைத் தவிர.

பாஜக மட்டுமே இதைக் காட்டி ஆதாயம் அடைய முயலும்

தேசத்தின் எங்கோ ஒரு மூலையில் ஒரு பாதிப்பு நிகழ்ந்தாலும் அதை அறுவடை செய்ய ஒரு கூட்டம் காத்திருக்கும்போது, நடந்தவைகளைப் புரிந்து கொண்டு அதற்கு பதில் வினையாக அனைவரிடமும் அன்பையும், அமைதியையும், ஆறுதலையும் செலுத்த வேண்டியது நம் அனைவரின் மீதும் கடமையாக இருக்கிறது.

24.04.2025

வெள்ளி, 18 ஏப்ரல், 2025

தோஹா WTO மாநாட்டில் முரசொலி மாறன்

தோஹா WTO மாநாட்டில் 

முரசொலி மாறன் 

தோஹாவில் 142 நாடுகள் கலந்து கொண்ட WTO மாநாடு. மூன்றாம் உலக நாடுகளுக்கு எதிரான ஒப்பந்தம் என இந்தியாவின் காமர்ஸ் அமைச்சர், கலைஞரின் மனசாட்சி முரசொலி மாறன் கடுமையாக எதிர்த்து அந்த மாநாட்டையே ஸ்தம்பிக்க வைத்தார்.


பிறகு அமெரிக்கா பணிந்து, கேட்ட திருத்தமெல்லாம் செய்த பிறகே இந்தியா கையெழுத்திட்டது வரலாறு.


ஒரு மத்திய அமைச்சர் எத்தனை ஆழமாக தனது துறை சார்ந்த விஷயங்களைப் படித்து அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்கு உலகிற்கே எடுத்துக்காட்டு முரசொலி மாறன்.


பல துறை சார்ந்த நிபுணர்களால் வடிவமைக்கப்பட்ட ஒப்பந்தத்தை தனி ஆளாக படித்து, திருத்தங்கள் செய்து அசத்தினார்


அவரை அப்போதைய பிரதமர் வாஜ்பாய் தோஹா மாநாட்டுக்கு இந்தியக் குழுவை தலைமையேற்று செல்லுமாறு பணித்தார். அதுவரை பிரதமரே செல்வதாக திட்டம். திடீரென இவரை போகச் சொன்னவுடன், அந்த இரவு புறப்படும் முன் பிரதமரை சந்தித்து, நாளைய மாநாட்டில் இந்தியாவின் நிலைப்பாடு என்ன? என மாறன் கேட்டார்.


What My Commerce Minister Mr.Maran says is the policy of this country என்றார் பிரதமர். மேலும் மற்ற நாட்டு அதிபர்களுக்கு இணையான கவுரவத்துடன் இந்தியப் பிரதிநிதி செல்ல வேண்டும் என தனது தனி விமானத்தைத் தந்து அனுப்பினார்.


விமானத்திலேயே அதிகாரிகளுடன் டிராஃப்ட் ஒப்பந்தத்தை ஒவ்வொரு


பக்கமாக எடுத்து விவாதிக்கத் தொடங்கினார் மாறன். இதை எதிர்பாராத துறை அதிகாரிகள் சரியான முன்னேற்பாடு இன்றி திணற, முழு ஒப்பந்தத்தையும் இறுதி செய்யும் பொறுப்பை தானே ஏற்றுக் கொள்வதாக அறிவித்தார் மாறன்.


அந்த நிமிடத்தில் இருந்து அடுத்த இரண்டு நாட்கள் தூக்கம் இன்றி, துறை வல்லுநர்களிடம்


விவாதித்து இந்தியாவுக்குப் பாதகமான அம்சங்களை தனியே ஒரு பட்டியலிட்டார்.


மாநாட்டில் வாக்கெடுப்பு நடக்கும் சில மணி நேரம் முன்பு பாகிஸ்தான், பங்களாதேஷ், இலங்கை, மலேசியா, என பல நாட்டு அமைச்சர்களை அழைத்து மாநாட்டுக்குள்ளேயே தனிக்கூட்டம் நடத்தி அந்த ஒப்பந்தத்தின் பாதகங்களை விளக்கினார்.


அத்தனைத் தலைவர்களும் திகைத்து நிற்க, நம்மைப் போன்ற வளரும் நாடுகளுக்கு பாதகமான எந்த ஒப்பந்தத்தையும் WTO முன்னெடுக்கக் கூடாது என ஒற்றை வரித் தீர்மானத்தை மாறன் முன் மொழிய, மற்ற மூன்றாம் நாடுகள் வழி மொழிய அமெரிக்கா கடும் அவமானப்பட்டு தலைகுனிந்து நின்றது.


நேரடியா பிரதமர் வாஜ்பாயிடம்


அமெரிக்க அதிபரே பேச முயல, பிரதமர் எனது அரசுக்கு தனி மெஜாரிட்டி இல்லை. மாறன் முடிவுக்கு எதிராக நான் செயல்பட்டால் அரசே கவிழ்ந்து விடும் என சொல்லி விட்டார்.


தோஹா மாநாடுதான் இதுவரை உலகில் நடந்த சர்வதேச ஒப்பந்த மாநாடுகளில் முதன்முறையாக டிராஃப்ட் ஒப்பந்தங்கள் முழுமையாக மாற்றப்பட்டது.


தங்களது ஒப்புதல் இல்லாவிட்டால், அமெரிக்காவே நினைத்தாலும் எந்தவொரு ஒப்பந்தங்களும் கையெழுத்தாகாது என மூன்றாம் உலக நாடுகள் நம்பத் தொடங்கியது அன்றுதான்.


உலக அரங்கில் இந்தியா தன்மானத்துடன் விஸ்வரூபம் எடுத்து நின்றது. அரசியல் காழ்ப்புணர்வுகளை விடுத்து, ஒரு இந்தியனாக, தமிழனாக நாம் கொண்டாட வேண்டிய ஆளுமை முரசொலி மாறன்.


அவர் உன்னிப்பாக கவனித்து செய்த ஒப்பந்தத்தின் விளைவுதான் இன்று அமெரிக்க அதிபர் அத்தியாவசிய மருந்து ஏற்றுமதிக்கு அனுமதி கேட்டு நிற்பது. இல்லாவிடின் அது ஒருவழிப் பாதையாக இருந்திருக்கும். இன்று மோடிக்கு அந்த தொலைபேசி அழைப்பும் வந்திருக்காது.

வெள்ளி, 4 ஏப்ரல், 2025

வக்ஃப் திருத்த மசோதாவை எதிர்ப்பதற்கு சொல்லப்படும் காரணங்கள்:

வக்ஃப் திருத்த மசோதாவை எதிர்ப்பதற்கு சொல்லப்படும் காரணங்கள்:


1. அரசியலமைப்பு உரிமைகளுக்கு எதிரானது:
இந்த மசோதா இந்திய அரசியலமைப்பின் பிரிவுகள் 14 (சமத்துவம்), 15 (பாகுபாடு தடை), மற்றும் 25 (மத சுதந்திரம்) ஆகியவற்றை மீறுகிறது. இது முஸ்லிம் சமூகத்தின் அடிப்படை உரிமைகளைப் பறிக்கும் முயற்சியாகும்.

2. மத சுதந்திரத்தில் தலையீடு:
வக்ஃப் என்பது இஸ்லாமிய மரபில் தொண்டு நோக்கத்திற்காக அர்ப்பணிக்கப்படும் சொத்து. இதை நிர்வகிக்கும் / முடிவெடுக்கும் அதிகாரத்தை வக்ஃப் வாரியங்களிடமிருந்து மாவட்ட ஆட்சியர்களின் கட்டுப்பாட்டிற்கு மாற்றுவது, மத விவகாரங்களில் அரசு தலையிடுவதாகும்.

3. பாகுபாடு மற்றும் ஒருதலைப்பட்சம்:
மசோதா பாகுபாட்டுடன் ஒருதலைப்பட்சமாக முஸ்லிம் சமூகத்தை மட்டும் குறிவைத்து, அவர்களது சொத்து உரிமைகளையும் தனிச்சட்டங்களையும் பறிக்க முயல்கிறது.
இராணுவத்திற்கும், இந்திய ரயில்வே - யுக்கும் அடுத்த நிலையில் அதிகமாக சொத்துக்களை வைத்திருக்கும் அமைப்பாக வக்ஃப் வாரியத்தை பாஜக அரசு காட்டுகிறது.
இது இந்தியா முழுவதும் உள்ள அனைத்து  மசூதிகள், தர்காக்கள், கல்வி சாலைகள் போன்றவற்றின் பொதுச் சொத்துக்களைக் தொகுத்து காட்டும் மதிப்பாகும்.
இதே போல் இந்தியா முழுவதும் உள்ள கோயில் சொத்துக்களையும் ஒரு கணக்கில் தொகுத்தால் அது நிச்சயம் ராணுவத்தையும், ரயில்வேயையும் விட அதிகமான அளவு சொத்து மதிப்புடையதாக இருக்கும்.
வக்ஃப் சொத்துக்களை மதிப்பிடும் பாஜக அரசு அவற்றை ஏன் தொகுத்து மதிப்பிடவில்லை ? ஏன் அந்த சொத்துக்களின் மேல் அக்கறை காட்டுவதில்லை ?

4. வெளிப்படைத்தன்மை மற்றும் ஆலோசனை இல்லாமை:
இந்த மசோதாவை உருவாக்குவதற்கு முன் முஸ்லிம் சமூகத்திடமிருந்து போதுமான ஆலோசனை பெறப்படவில்லை. மாறாக எதிர்கட்சிகள் வழங்கிய திருத்தங்கள் அனைத்தையும் புறந்தள்ளி விட்டு பாஜகவும், அதன் கூட்டாளிகளும் வழங்கிய திருத்தங்களை மட்டும் முழுவதுமாக ஏற்றுக்கொண்டு இந்த மசோதா ஒருதலைப்பட்சமாக பாஜக அரசால் திணிக்கப்படுகிறது.

5. சொத்து உரிமை மீதான அச்சுறுத்தல்:
வக்ஃப் சொத்துகளை மாவட்ட ஆட்சியர்களின் கட்டுப்பாட்டிற்கு மாற்றுவது, அரசு நிலங்களை உரிமை கோருவது போன்ற முன்மொழிவுகள், இது ஒரு "நில ஆக்கிரமிப்பு முயற்சி"யாகும். இதனால் முஸ்லிம் சமூகத்தின் சொத்துகள் அரசால் அபகரிக்கப்படலாம். பிறகு மற்ற நண்பர்களுக்கு தாரை வார்க்கப்படலாம்

6. நிர்வாகத்தில் பிரதிநிதித்துவக் குறைபாடு:
வக்ஃப் வாரியங்களில் முஸ்லிம் அல்லாதவர்களையும், பெண்களையும் சேர்க்க வேண்டும் என்று புதிய மசோதா கூறுகிறது.
ஏற்கனவே பெண்கள் பிரதிநிதித்துவம் அமலில் உள்ளது. இம்முறை 2 பேர் வரையிலும் என்று Maximum limit குறிப்பிடப்பட்டுள்ளது.
முஸ்லீம் அல்லாதவர்களை முஸ்லீம் வக்ஃப் சொத்துக்களை நிர்வகிக்க சேர்க்க வேண்டும் என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டுமென்றால் மத நல்லிணக்கத்தின் அடிப்படையில் கோயில்களின் அறங்காவல் குழுக்களில் முஸ்லீம்களை, கிறிஸ்தவர்களை இதர தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி இன இந்துக்களை சேர்த்துக் கொள்ள வேண்டும். அதை சட்டமாக கொண்டு வர  வேண்டும்
புதிய மசோதாவில் மத்திய வக்ஃப் கவுன்சிலுக்கு நியமிக்கப்படும் உறுப்பினர்கள் :
தலைவர் (முஸ்லீம்) -1, MP க்கள் - 3 max, மாநில வக்ஃப் போர்டு பிரநிதிகள் (சுழற்சி முறையில்) - 3 Max, நீதிபதி / வழக்கறிஞர்- 2 Max, முஸ்லீம் மத அறிஞர்கள் - 2 Max, மத்திய அரசு அலுவலர்கள் -2 Max
பெண்கள் - 2 Max
இதில் மொத்தம் 15 பேரில் 3 பேர் மட்டுமே முஸ்லீம்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதே போல் மாநில வக்ஃ போர்டுக்கு நியமிக்கப்படும் உறுப்பினர்கள் :
தலைவர் (முஸ்லீம்). -1, MLA.க்கள் 1 - 2., நியமன முஸ்லீம் உறுப்பினர்கள் - எண்ணிக்கை குறிப்பிடப்படவில்லை
நீதிபதி / வழக்கறிஞர்- 1 , முஸ்லீம் மத அறிஞர்கள் 1 - 2, கலெக்டர் IAS கிரேடு - 1
பெண்கள் - 2 Max
இதில் மொத்தம் 11 பேரில் 5 பேர் மட்டுமே முஸ்லீம்கள் ( நியமன உறுப்பினர்கள் 2 உட்பட)  என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த தலைவர் மற்றும் உறுப்பினர்களை நியமனம் செய்வது மத்திய, மாநில அரசுகளே.
பாஜக ஆளும் மாநிலங்களில் யாரை நியமனம் செய்வார்கள் என்பது ஊரறிந்தது..
மொத்தத்தில் முஸ்லீம்கள் எண்ணிக்கை குறைவதால் எடுக்கப்படும் நடவடிக்கைகள் முஸ்லீம்களுக்கு பாதகமாக அமையும் என்பது அச்சத்தை தருகிறது

7. அரசியல் நோக்கம்:
இந்த மசோதா முஸ்லிம்களை அடக்குவதற்கும், அவர்களை ஆதிக்கம் செலுத்துவதற்கும், அரசியல் லாபம் தேடுவதற்கும் கொண்டுவரப்பட்டுள்ளது
நாட்டில் எத்தனையோ பிரச்னைகள் இருக்க ஆளும் பாஜக தன் RSS தலைமையின் Agenda வை எடுத்துக் கொண்டு குடியுரிமை சட்டம் CIA, முத்தலாக் சட்டம், ஹிஜாப் கட்டுப்பாடு, பசு வதை சட்டம், மதமாற்ற தடை சட்டம், ஹலால் உணவு பிரச்னை, நகர் பெயர்கள் தெருப் பெயர்கள் மாற்றம், மசூதிகளை இடித்து கோயில்களாக்குவோம் என்ற கூச்சல், ரம்ஜான் பண்டிகை விடுமுறை ரத்து, மசூதிகளை போர்வையால் மூடி விட்டு வீட்டிலேயே தொழுது கொள்ள யோகிநாத் உத்தரவு, எதிர்த்து குரலெழுப்பும் முஸ்லீம் வீடுகளை மட்டுமே இடித்துக் தள்ளும் புல்டோசர் நடவடிக்கைகள் என்று தொடர்ந்து முஸ்லீம் விரோத செயல்களையே மேற்கொண்டு வரும் பாஜக சொல்லும் காரணங்களை யாராலும் நம்ப முடியாது.
இது முஸ்லீம்கள் நலனுக்காக, முஸ்லீம் பெண்களின் நலனுக்காக என்று பாஜக அரசு சொல்வது ஆடு நனைகிறதே என்று ஓநாய் நீலிக் கண்ணீர் வடிக்கும் கதைதான்


8. நீதித்துறை அதிகாரத்தில் மாற்றம்:
வக்ஃப் தீர்ப்பாயங்களின் அதிகாரத்தைக் குறைத்து, அவற்றின் தீர்ப்புகளை இறுதியானதாகக் கருதாமல், உயர்நீதிமன்றங்களில் மேல்முறையீடு செய்ய அனுமதிப்பது, நீண்டகால வழக்குகளை அதிகரிக்கும்.

இன்னும் இந்த வக்ஃப் திருத்த மசோதாவை எதிர்க்க பல காரணங்கள் இருக்கின்றன. கட்டுரை நீளும் என அஞ்சி தவிர்க்கிறேன்

AM நூர்தீன்

வியாழன், 3 ஏப்ரல், 2025

ஜெயலலிதா நிரபராதியா ?

 ஜெயலலிதா நிரபராதியா?




பார்ப்பனியத்துக்கும் பணத்துக்கும் கைப்பாவையே நீதிமன்றம்!


நீதியை நிலைநாட்ட ஒரே வழி மக்கள் அதிகாரம்!


அன்பார்ந்த உழைக்கும் மக்களே,

ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டு விட்டார். இது விலைக்கு வாங்கப்பட்ட தீர்ப்பு என்பது உலகத்துக்கே தெரியும். இருந்த போதிலும், தான் புடம் போடப்பட்ட சொக்கத் தங்கமாக வெளியே வந்திருப்பதாக கொஞ்சம் கூட வெட்கமே இல்லாமல் சொல்லிக் கொள்கிறார் ஜெயலலிதா.


மிகுந்த அக்கறையுடனும் நேர்மையாகவும் நீதிபதி குன்ஹா அளித்த தீர்ப்பை, திமிர்த்தனமாகவும் அலட்சியமாகவும் ரத்து செய்திருக்கிறார் குமாரசாமி. மொத்தம் 900 பக்க தீர்ப்பில், சாட்சிகள் சொன்னது, குன்ஹாவின் தீர்ப்பு, அன்பழகன் தரப்பு வாதம், கர்நாடக அரசின் வாதம், சு.சாமியின் வாதம் எல்லாம் சேர்த்து 870 பக்கம். குமாரசாமியின் சொந்த சரக்கு வெறும் 30 பக்கம்தான். அந்த 30 பக்கங்களிலும் வாங்கின காசுக்கு மேல் கூவி விட்டார் குமாரசாமி.


குன்ஹாவின் தீர்ப்புப்படி வருமானத்துக்கு மேல் 540 சதவீதம் அதிகமாக சொத்து சேர்த்திருக்கிறார் ஜெயலலிதா. ஆனால் வருமானத்துக்கு மேல் 8.12 சதவீதம் அளவுக்குத்தான் ஜெயலலிதா சொத்து சேர்த்திருக்கிறார் என்பது குமாரசாமி போட்டிருக்கும் கணக்கு. 540 சதவீதத்தை 8 சதவீதமாகக் குறைத்து கணக்கு கட்டுவதற்காக, நகைகள், கட்டிடம் எஸ்டேட் போன்ற பல சொத்துக்களின் மதிப்பை வேண்டுமென்றே அவர் குறைத்துக் காட்டியிருக்கிறார். அரசு ஊழியர் அன்பளிப்பு வாங்குவதில் தவறில்லை என்று கூறி சட்டத்தை வளைத்திருக்கிறார்.வளர்ப்பு மகன் கல்யாண செலவுக்கும் ஜெயாவுக்கும் சம்மந்தமேயில்லை என்று சாதித்திருக்கிறார்.

இப்படிப் பல தகிடுதத்தங்கள் செய்தும் அவரால் சொத்து மதிப்பை குறைக்க முடியவில்லை. வாங்கின காசுக்கு வேலையை முடிக்க வேண்டும் என்ற அவசரத்தில் ஜெயலலிதா வாங்காத கடன் 13.5 கோடி ரூபாயை வாங்கியதாகக் காட்டி கணக்கை முடித்து தீர்ப்பை எழுதியிருக்கிறார் குமாரசாமி.


உலகறிந்த ஒரு ஊழல் வழக்கில் 'அஞ்சும் மூணும் ரெண்டு' என்று குமாரசாமி ஒரு கணக்கு போட்டிருக்கிறார். இப்போது பொய்க்கணக்கு அம்பலமாகிவிட்டது. இதன் காரணமாக, 'யானோ மன்னன் யானே கள்வன்' என்று குமாரசாமி நெஞ்சுவலி வந்து உருண்டு விழவில்லை. பதவி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறாரா என்றால் அதுவும் இல்லை.


குமாரசாமியின் கணக்கு சரியா தப்பா என்பதை நாம் சொல்லக் கூடாதாம். அதை உச்ச நீதிமன்ற நீதிபதிதான் சொல்ல வேண்டுமாம். அஞ்சும் மூணும் எவ்வளவு என்று சுப்ரீம் கோர்ட்டில் ராம் ஜெத்மலானி, நாரிமன் போன்ற வக்கீல்கள் வாதாடி, அதுக்கு பத்து வாய்தா வாங்கி, அப்புறம் அப்புறம் தீர்ப்பு சொல்வார்களாம். அதுவரை 'அஞ்சும் மூணும் ரெண்டு' என்ற குமாரசாமி தீர்ப்பின் அடிப்படையில் அம்மா முதலமைச்சராக இருக்கலாமாம். குமாரசாமியை யாரும் குற்றம் சொல்லக் கூடாதாம். சொன்னால் நீதிமன்ற அவமதிப்பாம். இந்தக் கேலிக்கூத்துக்குப் பெயர் சட்டத்தின் ஆட்சியாம்.


பதினெட்டு ஆண்டு காலம் நடைபெற்ற இந்த சொத்துக் குவிப்பு வழக்கின் வரலாறு முழுவதுமே கேலிக்கூத்துதான். குன்ஹாவின் தீர்ப்பையும், கர்நாடக உயர்நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தின் அரிதான சில தீர்ப்புகளையும் தவிர, மற்றெல்லா சந்தர்ப்பங்களிலும் போயஸ் தோட்டத்தின் செக்யூரிட்டியாகவே உச்ச நீதிமன்ற நீதிபதிகள் இருந்திருக்கிறார்கள்.


அரசு வழக்குரைஞர் ஆசார்யா மிரட்டி துரத்தப்பட்டார். உச்ச நீதிமன்றம் வேடிக்கை பார்த்தது. அரசு வழக்குரைஞராக பவானிசிங் தான் இருக்க வேண்டும் என்று ஜெயலலிதா ஆசைப்பட்டார். 'அவ்வண்ணமே ஆகுக' என்று தீர்ப்பளித்தார்கள் உச்ச நீதிமன்ற நீதிபதிகள். ஜெயாவுக்கு உடனே பெயில் கொடுத்து, மூன்றே மாதத்தில் மேல் முறையீட்டை உயர்நீதிமன்றம் முடிக்க வேண்டும் என்று உத்தரவும் போட்டார் தலைமை நீதிபதி தத்து. கர்நாடக உயர்நீதி மன்றத்தில் தனக்கு எதிராக வழக்கு நடத்த, பவானிசிங்கை ஜெயலலிதாவே நியமித்துக் கொண்டார். பச்சையான இந்த அயோக்கியத் தனத்தை அங்கீகரித்து, வழக்கை நடத்தினார் குமாரசாமி.


பிறகு பவானி சிங் நியமனமே செல்லாது என்று உச்ச நீதிமன்ற நீதிபதி லோகுர் தீர்ப்பளித்தார். அதனை நிராகரிக்க முடியாததால், "பவானி சிங்கை நியமித்தது சட்ட விரோதம்தான், இருந்தாலும் அரசு தரப்பு வக்கீல் இல்லாமல், குமாரசாமியே நீதி வழங்குவார்" என்று உலகில் எங்குமே கேள்விப்பட்டிராத ஒரு கட்டப்பஞ்சாயத்து தீர்ப்பை வழங்கினார்கள் தீபக் மிஸ்ரா தலைமையிலான 3 உச்ச நீதிமன்ற நீதிபதிகள்.


எல்லா அயோக்கியத்தனங்களுக்கும் சிகரம் வைத்தாற்போன்றதொரு தீர்ப்பை இப்போது குமாரசாமி வழங்கியிருக்கிறார். தத்து குமாரசாமியின் நண்பர் என்றும், சில ஊழல் குற்றச்சாட்டுகளிலிருந்து குமாரசாமியை காப்பாற்றி விட்டிருக்கிறார் என்றும் இப்போது செய்தி வெளியாகியிருக்கிறது. தலைமை நீதிபதி தத்துவின் ஊழல் சொத்துப் பட்டியலை வெளியிட்டிருக்கிறார் முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி கட்ஜு.


ஜெயாவின் சொத்துக் குவிப்பு வழக்கில் தீர்ப்பளித்த உயர்நீதிமன்ற, உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் சொத்து விவரம் பற்றி ஒரு விசாரணை நடத்தினால், டஜன் கணக்கிலான நீதிபதிகளுக்கு எதிராக சொத்து குவிப்பு வழக்கு பதிவு செய்ய வேண்டி வரும்.

ஜெயலலிதாவைக் காட்டிலும் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டிய குற்றவாளிகள் இந்த நீதிபதிகள்தான் என்பது அப்போது தெரியும்.


ஜெயலலிதா வழக்கில் மட்டுமல்ல. சங்கராச்சாரியில் தொடங்கி, மோடி அத்வானி, அமித் ஷா உள்ளிட்ட எல்லா பார்ப்பன பாசிசக் கொலையாளிகளையும், முஸ்லிம்களை நரவேட்டையாடிய போலீசு, ராணுவ அதிகாரிகளையும், தலித் படுகொலைக் குற்றவாளிகளையும் நீதிமன்றங்கள் அடுத்தடுத்து விடுதலை செய்கின்றன. சல்மான் கான் போன்ற பணக்காரப் பொறுக்கிகளுக்கும், சத்யம் ராமலிங்க ராஜு போன்ற கார்ப்பரேட் கிரிமினல்களுக்கும்தான் நீதிமன்றங்கள் ஆடுகின்றன. இதுதான் நீதித்துறையின் யோக்கியதை.


உயர்நீதிமன்ற, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கையும் களவுமாகப் பிடிபட்டாலும். நாடாளுமன்றத்தின் ஒப்புதல் இல்லாமல் அவர்களைத் தண்டிக்க முடியாது. எனவே மிகவும் துணிச்சலாக லஞ்சம் வாங்கும். குற்றவாளிகள், நீதிபதிகள்தான் என்பதை நாம் மறந்து விடக்கூடாது.


குமாரசாமியின் குருநாதர்கள்தான் உச்ச நீதிமன்றத்தில் அமர்ந்திருக்கின்றனர். குன்ஹாவைப் போன்றோர் விதிவிலக்குகள். நீதிபதிகளில் ஆகப் பெரும்பான்மையோரும் குமாரசாமிகள்தான். 45% கமிசன் என்று பொதுப்பணித் துறை காண்டிராக்டர்கள் சொல்கிறார்களே, அதுதான் விதி, முத்துக் குமாரசாமி ஒரு விதிவிலக்கு. விதிவிலக்குகள் ஒருபோதும் விதியாகி விடாது.


எனவே ஜெயலலிதாவை மட்டுமல்ல. ஊழல் பேர்வழிகளையும் மக்கள் விரோதிகளையும் நீதி மன்றத்தின் மூலம் தண்டித்து விட முடியும் என்ற மயக்கத்துக்கு நாம் ஆளாகக் கூடாது. நீதித்துறையே குற்றவாளிகளின் கூடாரமாகவும், தீர்ப்பு என்பது விலைப்பேசி விற்கப்படும் பொருளாகவும் மாறி வெகு காலமாகி விட்டது.அங்கே மக்களுக்கு ஒருக்காலும் நீதி கிடைக்காது.


நீதிமன்றம் மட்டுமல்ல. சட்ட மன்றம். நாடாளுமன்றம், போலீசு, இராணுவம் உள்ளிட்ட இந்த அரசுக் கட்டமைப்பு முழுவதும் கிரிமினல்களே நிறைந்திருக் கிறார்கள். போலீசு ஐ.ஜி காப்பியடித்து மாட்டிக் கொள்கிறார். டி.ஐ.ஜி மீது பாலியல் வன்முறை வழக்கு. இன்ஸ்பெக்டர்கள் வழிப்பறி செய்கிறார்கள். இராணுவமோ கஞ்சா கடத்துகிறது. அரசியல்வாதிகளைப் பற்றி சொல்லத் தேவையில்லை. மொத்தத்தில் இந்த அரசுக்கட்டமைப்பு தோற்றுவிட்டது. திவாலாகி விட்டது.


குமாரசாமி தீர்ப்பின் மூலம் ஜெயலலிதா பெற்றிருக்கும் வெற்றி என்பது இந்த அரசுக் கட்டமைப்பின் தோல்விக்கு ஒரு சான்று. இங்கே முதல்வர் முதல் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ். நீதிபதிகள் வரை அனைவரும் கிரிமினல்கள் தான். இந்த அரசுக் கட்டமைப்பையே குற்றவாளிகள்தான் கட்டுப்படுத்துகிறார்கள். இந்த அமைப்புக்குள் குற்றவாளிகளை ஒருபோதும் தண்டிக்க முடியாது என்பதை புரியாதவர்களுக்கும் புரியும்படி ஜெயலலிதா நிரூபித்துக் காட்டியிருக்கிறார்.


நீதியை நிலைநாட்ட வேண்டுமானால், இந்தக் கட்டமைவுக்கு வெளியே, மக்கள் அதிகாரத்துக்கான அமைப்புகளைக் கட்டியமைப்பது ஒன்றுதான் வழி, மக்கள் திரளின் வலிமை கொண்டு மாற்று அரசியல் கட்டுமானங்களை உருவாக்குவோம்! ஜெயலலிதா உள்ளிட்ட குற்றவாளிகளைத் தண்டிப்போம்!


மக்கள் கலை இலக்கியக் கழகம் விவசாயிகள் விடுதலை முன்னணி புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி பெண்கள் விடுதலை முன்னணி


சென்னை - காஞ்சிபுரம் - திருவள்ளூர் மாவட்டங்கள் 9551869588-9445112675

9444834519-9841658457

புதிய ஜனநாயகம்

புதிய தொழிலாளி 

மே 2015


ரஜினியின் குடும்பம்

ரஜினியின் குடும்பம் காமெடி நடிகர் ஒய்.ஜி.மகேந்திரனின் அப்பா ஒய்.ஜி.பார்த்தசாரதி. புகழ்பெற்ற அமெச்சூர் நாடகக் குழுவை நிறுவி நடத்திய நடிகர். ப...