தமிழ்நாடு முதல்வர்களின் போராட்ட வரலாறுகள்
ஸ்ட்ரெய்ட்டா ஹீரோதான், இந்த அமெரிக்க மாப்பிள்ளை, தம்பி, மச்சான்னுல்லாம் கேரக்டர் பண்ண மாட்டீங்களா ?
இல்ல சார்.
நடிச்சா ஹீரோவாத்தான். அப்படியே கொஞ்சம் கொஞ்சமா டெவலப் ஆகி சூப்பர் ஸ்டார், அரசியல், சி எம் பதவின்னு போறதுதான் என் இலட்சியம்.
மேற்கண்ட உரையாடல் காதல் திரைப்படத்தில் வந்த பிரபலமானக் காட்சி.
தமிழக வெற்றிக் கழகத்தின் விஜய்தான் அந்த ஸ்ட்ரெய்ட்டா சி.எம்தான் கேரக்டர்.
தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றியாத அந்தத் தற்குறி கூட்டத்துக்காகச் சில தரவுகள்
தமிழ்நாட்டில் மக்களால் விரும்பித் தேர்ந்தெடுக்கப்பட்டு முதலமைச்சர் ஆனவர்களின் பட்டியலில் ஒரே ஒருவர் கூட ஸ்ட்ரெய்ட்டா C M ஆனவர்கள் எவருமில்லை.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு முதலமைச்சராக ஆன சிலரைக் காண்போம்.
1.) காமராசர்
2.) அண்ணா
3.) கலைஞர்
4.) எம் ஜி ஆர்
5.) ஜெயலலிதா
6.) ஸ்டாலின்
இந்தப் பட்டியலில் இராஜகோபால், பக்தவச்சலம், ஜானகி, பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி போன்றோரெல்லாம் வர மாட்டார்கள். காரணம் அவர்களெல்லாம் நியமன முதலமைச்சர்கள். அந்தப் பதவிக்கு அவர்கள் தகுதியற்றவர்கள் என மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள்.
நிற்க.
காமராஜர் திடுக்கென முதலமைச்சர் ஆனவர் இல்லை. முப்பது வருடங்களுக்கும் மேலாக காங்கிரஸ் கட்சியின் அடிமட்டத் தொண்டனாக இருந்து, கடுமையான களப்பணிகளைச் செய்து, பல தோல்விகள், அவமானங்கள், புறக்கணிப்புகளைச் சந்தித்து படிப்படியாக மேலேறி சிகரத்தை அடைந்தவர் !
அண்ணாவின் அரசியல் வரலாறு, காமராசருக்கு நிகரானது. தேர்தல் அரசியலல்லாது சமூகசேவை இயக்கங்களில் களப்பணி ஆற்றியவர்.
தினமும் எழுதினார். தினமும் பொதுக்கூட்டங்களில் பேசினார். சாலை வசதி, வாகனப்போக்குவரத்து குறைந்திருந்த அந்தக் காலத்திலும் தினமொரு ஊருக்கு சொற்பொழிவாற்ற பயணித்தவண்ணமிருந்தார்.
இந்தி எதிர்ப்பு போராட்டக் களங்களில் நேரடியாக இறங்கி, பெரியாரோடு கொடுஞ்சிறைகள் கண்டவர் அண்ணா !
திமுகவை ஆரம்பித்தவுடன் தேர்தல் அரசியலுக்குள் குதித்துவிடவில்லை அண்ணா.
பின்னொரு நாளில் குதித்தாலும் உடனே நேரடியாக சட்டமன்றத் தேர்தலை குறிவைத்து முதலமைச்சர் ஆசை கொண்டதில்லை.
சென்னை மாநகராட்சி, இடைத்தேர்தல்கள், உள்ளாட்சி அதிகாரங்களைத்தான் முதலில் திமுக கைப்பற்றியது. கட்சி ஆரம்பித்து எட்டு வருடங்களுக்குப் பின்தான்(1957) முதல் சட்டமன்றத் தேர்தலில் அண்ணா தலைமையிலான திமுக போட்டியிட்டது. அன்றிருந்த அனைத்து தொகுதியிலெல்லாம் போட்டியிடவில்லை. 50 தொகுதிகளைத் தேர்ந்தெடுத்து, திறமையானவர்களை அவற்றில் போட்டியிடச் செய்தார் அண்ணா !
அண்ணா தலைமையிலான திமுக கட்சி, தான் பங்கெடுத்த முதல் சட்டமன்றத் தேர்தலிலேயே போட்டியிட்ட தொகுதிகளில் கிட்டத்தட்ட பாதி தொகுதிகளை வென்று சட்டமன்றத்துக்குள் நுழைந்தனர். கலைஞரும் அதிலிருந்தார். அண்ணாவின் சட்டமனறப் பேச்சுக்களும், கேள்விகளும், வாதங்களும்தான் தமிழ்நாட்டு மக்களை பெரிதும் ஈர்த்தன.
1962 ல் திமுக எதிர்கட்சி.
1967 ல் ஆளுங்கட்சி.
கணக்கு போட்டால் 18 வருடங்கள் கழித்தே அண்ணாவுக்கு முதலமைச்சர் பதவியை மக்கள் பரிசளித்திருக்கின்றனர் என்கிறது வரலாறு !
அதன் பின் கலைஞர்.
நெடுஞ்செழியனின் முதுகில் குத்தி, எம்ஜிஆரை கைக்குள் போட்டுக் கொண்டு கலைஞர் முதல்வராக நியமிக்கப்பட்டார் என்பார்கள் வவுத்தெரிச்சல் மிக்க துக்ளக் சோக்கள்.
உண்மையில் 1962 ல் சட்டமன்றத்தின் எதிர்கட்சித் தலைவராக இருந்த நெடுஞ்செழியனை விஞ்சி மக்களை பெரிதும் ஈர்த்தவராக சட்டமன்றத்தில் செயல்பட்டிருந்தார் கலைஞர். அண்ணா தோற்றிருந்த அந்த சட்டசபைத் தேர்தலுக்குப் பின் கட்சி உடைந்திருந்தது. இருந்தும் கட்சியைச் சிதறவிடாமல் கட்டிக் காத்த சாதுர்யம் கலைஞரிடத்தில் இருந்தது. அந்தத் தகுதிகள்தான் அவருக்கு 1969 ல் முதலமைச்சர் பதவியைத் தந்தனவே அன்றி ஆரிய காண்டுகள் சொல்வது போல் அல்ல.
ஆனால் 1971 ல், கலைஞர்தான் முதலமைச்சர் என்று சொல்லி குதித்த தேர்தலில், எந்தக் கட்சியும் அதுவரை கண்டிராத வெற்றியை ;
திமுக இதுவரை கூட கண்டிராத வெற்றியை கலைஞர் அன்று பெற்றார்.
அந்த ஆட்சியில் கலைஞர் கொண்டுவந்த எண்ணிலடங்கா நலத்திட்டங்கள் உலகளவில் புகழ்பெற்றவை !
கலைஞர் முதலமைச்சர் ஆக இருபது வருடங்கள் பிடித்தன. இத்தனைக்கும் அவர் தமிழர்களிடையே 1949 லியே பெரும்புகழ் பெற்றவர். 1952 ல் பராசக்திக்கு அவர் எழுதிய வேளையில், சிவாஜியை நிராகரிக்கத் துடித்த மெய்யப்பச் செட்டியாரிடமே சிவாஜிக்குத்தான் எழுதுவேன் என்று பிடிவாதம் காட்டி, சிவாஜியை நீடிக்கச் செய்யுமளவு வல்லமை மிக்கவர் (இதற்கு முன்பே நாயகர்கள் நடுங்கும் தயாரிப்பாளரான டி ஆர் சுந்தரத்திடமும் வாதிட்டு எம் ஜி ஆருக்கு கதாநாயகன் வாய்ப்புகளை தக்க வைத்துக் காத்தவர் கலைஞர்)
மலைக்கள்ளன் படத்தில் எடுத்தவுடன் திரையில் ஹீரோ பெயரோ, தயாரிப்பாளர் பெயரோ, இயக்குனர் பெயரோ வராமல் உரையாடல் எழுதிய கலைஞர் பெயரைத்தான் முதலில் காட்டினார்கள்.
மனோகரா, பூம்புகார் எல்லாம் கலைஞரின் உரையாடலுக்காகவே ஓடிய படங்கள்.
திரைக்கதை & உரையாடல் எழுதுவதில் இந்தளவு மக்கள் மனத்தைக் கொள்ளையடித்தவராக ஒரு கழகத் தலைவர் கூட அன்றில்லை.
இத்தனைக்கும் அன்று சினிமாவில் திராவிட இயக்கங்களைச் சார்ந்த பல தலைவர்கள் (அண்ணா உட்பட) இருந்தும், கலைஞர்தான் அதில் பெருவல்லவர். பிரமிக்கத்தக்க வெற்றிகளை ஈட்டியவர். அப்படி இருந்துமே அவர் முதலமைச்சராக இருபது வருடங்கள் தேவைப்பட்டன. அதற்குள் மும்முறை சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு, அனைத்திலும் வென்று சட்டமன்ற உறுப்பினாரகத் தொடர்ந்தவர் கலைஞர்.
சரி. எம் ஜி ஆர் 1972 ல் கட்சியை ஆரம்பித்தார். 1977 ல் முதலமைச்சர் ஆகிட்டார்ல்ல ?
அட கேக்கூக்களா ?
அவர் திமுகவுக்காக எத்தனை வருடங்கள் உழைத்தவர், எத்தனை பரப்புரைகளில் கலந்துக் கொண்டவர், தன் படங்கள் அனைத்திலும் வாய்ப்பு கிட்டும் போதெல்லாம் கட்சியின் கொள்கைகளைச் செருகியவர், திமுகவில் கட்சிப் பதவி, சட்டமன்ற உறுப்பினர் பதவிகளையெல்லாம் எம் ஜி ஆர் வகித்தார் என்கிற வரலாற்றை வாசிக்க வேண்டாமா ?
அந்த அடிப்படைதானே அவர் கட்சியைத் தொடங்கியதும் வெற்றிகளைத் தந்தன ?
ஒரு வெற்றியா ?
ஹாட்ரிக் வெற்றிகள்.
எம் ஜி ஆர் இறந்ததும் மீண்டும் முதலமைச்சர் ஆனார் கலைஞர்.
இடைப்பட்டக் காலத்தில் கலைஞர் எவ்வளவு மோசமானத் தோல்விகளை சந்தித்தார் ?
எப்படி தாங்கினார் ?
எப்படி அவருடைய அவ்வளவு பெரிய கட்சி உடையாமல் நீடித்தது ?
அவைகளெல்லாம் அரசியல்வாதிகளுக்கு எவ்வளவு அற்புதமான பாடங்கள் தெரியுமா ?
அதையெல்லாம் வாசிக்காமல், களத்தில் ஒன்றையும் புடுங்காமல், தோல்விக்கு அஞ்சி, ஸ்ட்ரெய்ட்டா சி எம் தான் என வரும் காமெடி பீஸ்களை என்னவென்று சொல்வதம்மா ?
ஜெயலலிதாவின் கதைகளும் உங்களுக்குத் தெரியும்.
பத்து வருடங்களுக்கும் மேலாக கட்சியில் உழைத்துத்தான் மேலே வந்தார். பெருவெற்றி பெற்று உடனே பெருந்தோல்வியும் பெற்றார். ஆனால் மீண்டெழுந்தார். அரசியல் களம் என்பது இப்படியான மேடு பள்ளங்களைக் கொண்டதுதான். மண்டபத்தில் எவனோ எழுதித்தரும் அறிக்கைகளை மட்டுமே விட்டெல்லாம் தமிழ் மக்களை ஈர்த்துவிட முடியாது.
கண்ணெதிரே அதற்கான சாட்சி ம நீ ம கமல்ஹாசன்.
உழைப்புக்கஞ்சாத அவர் உள்ளே வந்த போதே எச்சரித்தேன். அவரைக்காட்டிலும் அவர் பின்னால் போன மூடர்கள் மீதுதான் கவலை எனக்கு. காலம் வெகுவிரைவில் யதார்த்தம் என்னவென்று அவர்களுக்கு உணர்த்திவிட்டது !
சரி. நாம் இறுதியாக பார்க்கவிருப்பது முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.
கலைஞருக்காவது கட்சிக்குள் வந்த இருபது வருடங்களுக்குள் முதலமைச்சர் ஆக முடிந்தது. ஆனால் டீனேஜிலேயே கட்சிக்குள் வந்த ஸ்டாலினுக்கு இருபது வருடங்கள் கழித்துத்தான் சட்டமன்ற உறுப்பினராக போட்டியிட வாய்ப்பே கிட்டியது. கிட்டிய வெற்றியும் இரண்டு வருடங்கள் கூட நிலைக்கவில்லை. அடுத்த தேர்தலில் தோல்வி.
இப்படி தொடர்ந்த இவருடைய அரசியல் பயணம்தான் பரமபத விளையாட்டைப் போல் ஆகி, முந்தா நேத்து மேயர், நேற்று எதிர்கட்சித்தலைவர், இன்று முதலமைச்சர் என்கிற ஏணியில் ஏற்றிவிட்டுள்ளது !
என்னதான் Paid Medias மூலம் நீங்கள் செயற்கையாக போலிப் பிம்பங்களை ஊதிப் பெருக்கி கட்டமைத்தாலும், மக்கள் தெளிவானவர்கள். ஆட்டுப்புழுக்கை கதி தெரியும்ல்ல ?
அணில் புழுக்கை கதியும் தெரிந்துவிடும்.
அதுவரை கோமாளிகள் போடும் குட்டிக்கரணங்களை ரசிப்போம் !
உயிர்மை இதழுக்காக 01/07/2024 அன்று எழுதியவர் திரு. ராஜா ராஜேந்திரன்🙏


