ஹார்ட் அட்டாக் - மாரடைப்பு விசித்திரமான வரலாறு
இப்போதெல்லாம் நெஞ்சுப் பகுதியில் வலி ஏற்பட்டால்
- உடனே மருத்துவமனைக்கு விரைந்து சென்று ஈசிஜி எனும் இதய சுருள் படம் எடுத்துப் பார்க்க வேண்டும் என்பது
பெரும்பான்மையினருக்கு தெரியும்
இதய ரத்த நாள அடைப்பை ஹார்ட் அட்டாக் என்கிறோம். அடைப்பு ஏற்பட்டதில் இருந்து மூன்று மணிநேரமே பொன்னான நேரம் என்று கணக்கில் கொள்ளப்படுகிறது
அதற்குள் சிகிச்சை செய்து அடைப்பை நீக்க வேண்டும்.
நிற்க
இங்கிருந்து செப்டம்பர் 23,1955
அமெரிக்காவுக்கு செல்வோம்
பனிப்போர் காலம்
இரண்டாம் உலகப்போரை வென்ற அதிபர் ட்ரூமன் இறக்க
இரண்டாம் உலகப்போரில் நேச நாடுகள் படையை தலைமை ஏற்று நடத்திய போர்த்தளபதி எய்ஸன்ஹோவர் அமெரிக்காவின் அதிபரானார்.
தனது அலுவலக பணிகளில் இருந்து ஒரு நாள் ஓய்வு எடுத்துக் கொண்ட அவர் செப்டம்பர் 23,1955 அன்று காலை கோல்ஃப் விளையாடிக் கொண்டிருக்கும் போது
நெஞ்செரிச்சலாக இருப்பதை உணர்ந்தார்.
அவரது சிறப்பு மருத்துவர் டாக்டர் ஹோவார்ட் ஸ்நைடர்
நெஞ்செரிச்சலுக்கான மருந்துகளை வழங்கினார்.
எனினும் நெஞ்செரிச்சல் அதிகமானதேயன்றி குறைந்தபாடில்லை.
இது வயிற்றுப் பிரச்சனை இல்லை. இதய ரத்தநாள அடைப்பாக இருக்கக்கூடும் என்று உணர்ந்த மருத்துவர் ஸ்நைடர்
அதிபரை மருத்துவமனைக்கு பத்து மணிநேரங்களுக்குப் பிறகு அன்றிரவு பரிந்துரைத்தார்.
பரிந்துரைக்கும் போது இதய ரத்த நாளத்தை விரிவடையச் செய்யும் அமைல் நைட்ரேட் மற்றும் நெஞ்சு வலியை குறைக்க உதவும் மார்ஃபின் ஆகியவற்றை தந்தார்.
மார்ஃபின் விளைவால் அதிபர் நன்றாக உறங்கி விட்டார்.
மறுநாள் காலை எழுந்தும் நெஞ்சு வலி விட்டபாடில்லை.
அருகில் உள்ள மற்றொரு மருத்துவமனையில் இருந்து ஈசிஜி எடுக்கும் உபகரணம் கொண்டு வரப்பட்டு ஈசிஜி எடுக்கப்பட்டது.
முந்தைய நாள் அறிகுறி தோன்றிய அதிபருக்கு
அடுத்த நாள் காலை எடுக்கப்பட்ட ஈசிஜியில் இதய ரத்த நாள அடைப்பு இருப்பது கண்டறியப்பட்டது.
அப்போதெல்லாம் இதய ரத்த நாள அடைப்பு ஏற்பட்டாலும்
இப்போது இருப்பது போல
எக்கோ கிடையாது
ஆஞ்சியோ கிடையாது
ஸ்டெண்ட் கிடையாது
இதய தசைகள் காயமாகியுள்ளதை அறியும் நொதிகள் பற்றி அறிவியல் அறிந்திருக்கவில்லை
இதய ரத்த நாள அடைப்புக்கு வழங்கப்படும் லோடிங் டோஸில்
உள்ள ஆஸ்பிரின் அப்போது காய்ச்சலுக்கும் மூட்டு வலிக்கு மட்டுமே வழங்கப்பட்டு வந்த மருந்தாகும்.
ரத்த நாள அடைப்புக்கு வழங்கப்படும்
க்லோபிடோக்ரெல் / ஸ்டேடின் போன்ற மாத்திரைகள் கண்டறியப்படவில்லை
அப்போது இதய ரத்த நாள அடைப்பு வந்தால் 30-40% மரணம் தான்
உயிர் பிழைத்தாலும் பலம் குன்றிய இதயத்துடன் சில காலம் வாழ்ந்து மரணிக்க வேண்டியது தான்.
உலகின் வல்லரசின் அதிபராக இருந்தாலும் அதே நிலைமை தான்.
இதய ரத்த நாள அடைப்பு என்பது நெஞ்சு வலி அன்றி நெஞ்செரிச்சல் / கழுத்து வலி / தாடை வலி என்றும் ஏற்படலாம் என்ற அறிவும் அப்போது இருந்திருக்கவில்லை
இதய ரத்த நாள அடைப்புக்கு
நைட்ரோ க்ளிசரின் ( ரத்த நாள விரிவடையச் செய்யும் மருந்து) மற்றும் வலியைக் குறையச் செய்யும் மார்ஃபின் மட்டுமே இருந்த சிகிச்சைகள்
நிற்க
மீண்டும் 2023 க்கு வந்து விடுவோம்
இந்தியாவில் இருந்து அமெரிக்கா சென்று மெடிக்கல் இண்சூரண்ஸ் இல்லாமல் ஒருவர் இருக்கிறார் என்று வைத்துக் கொள்வோம்
அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டு ஈசிஜி எடுத்துப் பார்க்க வேண்டுமென்றால்
ஒரு ஈசிஜி எடுத்துப் பார்க்க
$450 முதல் $1200 டாலர் செலவாகும் என்பதை அறிந்து அதிர்ந்தேன்.
இந்திய மதிப்பில் குறைந்தபட்சம் ₹36000 வருகிறது.
இதை எடுப்பதும் எளிதன்று
கட்டாயம் மருத்துவர் பரிந்துரைத்தால் மட்டுமே எடுக்க முடியும்.
அவசர சிகிச்சைப் பிரிவு மருத்துவரை சந்தித்து ஈசிஜி எடுக்க வேண்டும்.
இந்தியாவில்
தமிழ்நாட்டில்
ஒருவருக்கு அவர் நம் மாநிலத்தை சேர்ந்தவராக இருப்பினும் சரியே
வெளிமாநிலம் வெளி நாட்டினராக இருப்பினும் சரியே
இண்சூரன்ஸ் தேவையில்லை
நெஞ்சு வலி என்றால் அருகில் இருக்கும் அரசு மருத்துவமனைக்கு சென்றால் உடனடியாக
ஈசிஜி இலவசமாக எடுக்கப்படும்.
பணம் கொடுத்து ஈசிஜி எடுக்க வேண்டுமென்றாலும் ₹300 க்கு எடுத்து விட முடியும்.
மருத்துவ பரிந்துரை தேவையில்லை.
ஈசிஜி எடுத்து விட்டு மருத்துவரை படத்துடன் சந்திக்க முடியும்.
வல்லரசு நாட்டில் 70 வருடங்களுக்கு முன்பு அதிபருக்கு நேர்ந்த அதே விசயம் தான் இப்போதும் நேருகிறது
மருத்துவம் சாமானியர்களிடம் இருந்து தூரமாக நிற்கிறது.
இந்தியாவில் தமிழ்நாட்டில் சாமானியனுக்கும் எட்டக்கூடிய அளவில் மருத்துவ வசதி எளிமையாகக் கிடைக்கிறது என்பது தெரிகிறது.
நாம் வாழும் காலம்
வாழும் இடம் போன்றவை
நமது இருப்பை முடிவு செய்யும் ஆற்றல் பெற்றிருக்கின்றன என்பது புலனாகிறது
இந்த நிலை தொடர வேண்டும் என்பதே ஆவலாக உள்ளது.
Dr.அ.ப.ஃபரூக் அப்துல்லா
சிவகங்கை

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக