வியாழன், 20 நவம்பர், 2025

கலைஞர் பத்து கேள்வி பதில்கள்

கலைஞர்! பத்து கேள்வி பதில்கள்


கலைஞர் பற்றி கலைஞரே சொன்னது! 

அத்தனையும் தமிழனின் சொத்துக்கள்!


1. ஒன்றே குலம் என்பது சரி. ஆனால், ஒருவனே தேவன் என்ற கருத்து உங்களுக்கு ஏற்புடையதா?


அது தேவனோ தேவியோ? சக்தி ஒன்று இருக்கிறது. அதுதான் இயற்கை. அதற்கு கை, கால் இருக்கிறது. வரம் கொடுக்கும் ஆற்றல் இருக்கிறது என்பதையோ அது ஒருவரை வாழவைக்கும் அல்லது கெடுக்கும் என்று சொல்வதையோ என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது. 


2. உங்கள் வீட்டிற்கு அருகிலேயே வேணுகோபாலன் கோயில் ஒன்று இருக்கிறது என்றைக்காவது அங்கு சென்றது உண்டா?


 நான் வெளியூர் செல்லும்போது யாராவது அன்பின் காரணமாக வேல்கள், விநாயகர், அம்பாள் சிலைகளை பரிசாக தந்தால் அவற்றை இந்த கோவிலுக்கு அனுப்பி உள்ளேன். நான் அனுப்பிய அந்தப் பொருட்கள் இந்த கோயிலுக்கு போயிருக்கின்றன. நான் போனதில்லை.


3. உங்கள் கட்சியில் பலர் ஆத்திகர்களாக இருக்கிறார்களே?


என் குடும்பத்திற்கு உள்ளேயும்தான் இருக்கிறார்கள். அதையே நான் அனுமதிக்கிறேன். நேரு நாத்திக தலைவர்தான். ஆனால் அவருடைய காங்கிரஸ் இயக்கம் நாத்திக இயக்கம் இல்லையே?


4. தொல்காப்பியம், சங்க இலக்கியம் தொடர்பாக சிலாகித்து பேசியுள்ள நீங்கள் பக்தி இயக்கியங்கள் தொடர்பாக எதுவும் சொல்வதே இல்லை. கடவுள் நம்பிக்கையை முன் நிறுத்துகிறது என்பதாலேயே அவற்றை புறக்கணித்து விட முடியுமா?


 தொல்காப்பியம், சங்க இலக்கியம் பெரும்பாலும் சாதி சமயம், பக்தி இவற்றுக்கு அப்பாற்பட்ட மிக உயர்வான இலக்கண, இலக்கியங்களாகும். அவற்றுக்குப் பிறகு வந்தவை பக்தி இலக்கியங்கள். அவற்றை நான் புறக்கணித்ததும் இல்லை. புறம் தள்ளியதும் இல்லை. அவ்வகை இலக்கியங்களில் நான் படித்து தோய்ந்து இருக்கிறேன். அவை கடவுள் நம்பிக்கையை முன்னிறுத்துகின்றனவோ இல்லையோ தமிழ் மொழியின் நீள அகலத்தை நிச்சயமாக முன்னிறுத்துகின்றன.


5. நல்ல இலக்கியவாதியால் பெரிய அரசியல்வாதியாக இருக்க முடியாது என்பது பொதுவான கருத்து. உங்களால் எப்படி இருக்க முடிகிறது?


இதற்கு விதிவிலக்கு உண்டு. ஜவகர்லால் நேரு அடிப்படையில் இலக்கிய உள்ளமும் படைப்பாளிக்கான பண்பட்ட திறனும் கொண்டிருந்தவர். சிறையில் இருந்து கொண்டு தனது அருமை மகள் இந்திராவுக்கு அவர் எழுதிய கடிதங்கள் அனைத்தும் இலக்கிய செறிவு கொண்டவை. மூதறிஞர் ராஜாஜி அவர்கள் எழுத்திலும், பேச்சிலும், இலக்கியத்தின் குணாதிசயங்கள் இயங்கிக்கொண்டு இருப்பதை காணலாம்.


பேரறிஞர் அண்ணா இலக்கியப் பேரரசன். அப்படிப்பட்டவர்களோடு என்னை ஒப்பிட்டுக் கொள்வதற்காக இதை நான் சொல்லவில்லை. அரசியல் எனக்கு பிராணவாயு என்றால் இலக்கியம் எனக்கு தெம்பு ஊட்டும் சரிவிகித உணவு.


6. ஆட்சிப் பணி, கட்சிப் பணி, எழுத்துப்பணி என்று ஓய்வில்லா வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு இருக்கிறீர்கள். மனதையும், உடலையும் சோர்வடையாமல் வைத்துக் கொள்ள தாங்கள் கடைப்பிடிக்கும் பழக்கங்கள் என்ன?


 அதிகாலையில் 5 மணிக்கு எல்லாம் உதயசூரியனை காண்கிறேன். என் சோர்வு போக்க அது ஒன்று போதாதா?


7. தலைசிறந்த 10 புத்தகங்களை பட்டியல் இடுங்களேன்?


 ஒன்று திருக்குறள்.

 இரண்டு தொல்காப்பியம்.

 மூன்று புறநானூறு.

 நான்கு சிலப்பதிகாரம்.

 ஐந்து பெரியார் ஈவேரா சிந்தனைகள். 

ஆறு அண்ணா எழுதிய பணத்தோட்டம்.

ஏழு கார்க்கியின் தாய்.

எட்டு நேருவின் உலக வரலாறு.

ஒன்பது அண்ணல் காந்தியின் சத்திய சோதனை. 

பத்து ராகுல் சங்கருத்தியாவின் வால்கா முதல் கங்கை வரை.


8. எந்த நோக்கத்துக்காக நீங்கள் அரசியலுக்கு வந்தீர்களோ அது நிறைவே நிறைவேறிவிட்டதா?


 பெரும் அளவுக்கு நிறைவேறி உள்ளது. நிறைவேறியது. அனைத்தும் முழுமையான அளவுக்கு மன நிறைவை தந்துவிட்டது என்று என்னால் சொல்ல முடியவில்லை. இன்னும் நிறைவேற வேண்டியவை நிறைய உள்ளன. அந்த நோக்கங்களையும் நிறைவேற்றிடத்தான் நான் இன்னும் உழைத்துக் கொண்டு இருக்கிறேன்.


9. செய்ய நினைத்து செய்ய இயலாமல் போன காரியங்கள் என்னென்ன?

 மத்தியில் தமிழும் ஆட்சி மொழி. 

சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழும் பயன்பாட்டு மொழி. 

மாநில சுயாட்சி. 

இவைதான் இன்னும் முழுமையாக முடியாமல் இருக்கின்ற காரியங்கள்.

 

10. திமுகவின் இறுதி லட்சியம்?


 சமுதாயத்துறையில் சமத்துவம், பகுத்தறிவு. 

பொருளாதாரத் துறையில் சமதர்மம்.

 அரசியலில் ஜனநாயகம்.


-தலைவர் கலைஞர் 🔥🔥🔥

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ரஜினியின் குடும்பம்

ரஜினியின் குடும்பம் காமெடி நடிகர் ஒய்.ஜி.மகேந்திரனின் அப்பா ஒய்.ஜி.பார்த்தசாரதி. புகழ்பெற்ற அமெச்சூர் நாடகக் குழுவை நிறுவி நடத்திய நடிகர். ப...